தகுதி நீக்கம் செய்தாலும்.. கேள்வி கேட்பதை நிறுத்தவே மாட்டேன்.. டெல்லியில் கொந்தளித்த ராகுல் காந்தி
டெல்லி: அதானியின் ஷெல் கம்பெனியில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது யாருடையது? நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. என்னை தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நிறுத்தவே மாட்டேன் என ராகுல் காந்தி கொந்தளித்தார்.
2019 தேர்தல் பிரசாரத்தில் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் மோடி என்ற பெயர் பற்றி ராகுல் காந்தி சில கருத்துகளை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி இந்த கருத்தை தெரிவித்ததாக பாஜகவினர் தெரிவித்தனர்.
மேலும் ராகுலின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது அவதூறு வழக்கு சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடுத்தவர் குஜராத் பாஜக மாஜி அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி ஆவார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார்.

2 ஆண்டு சிறை-தகுதி நீக்கம்
அப்போது ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நேற்று ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பத்திரிகையாளர் சந்திப்பு
அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் ராகுல் காந்தியை எதிர்கொள்ள பாஜக பயப்படுவதால் தான் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் டெல்லியில் இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு
நாடாளுமன்றத்தில் சில வாரங்களுக்கு முன்பு நான் சில கேள்விகள் கேட்டேன். ரூ.20 ஆயிரம் கோடி அதானிக்கு சொந்தமான ஷெல் கம்பெனியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் யாருடையது? யார் முதலீடு செய்தனர்? என்ற கேள்விகளை எழுப்பினேன். அதானியின் உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பணம் யாருடையது? அதானிக்கும், பிரதமருக்கும் இடையே உள்ள உறவு குறித்து விரிவாக கூறினேன்.

கேள்விகள் கேட்டு கொண்டே இருப்பேன்
மேலும் நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். அதன்பிறகு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினேன். மேலும் நாடாளுமன்றத்தில் என்னை பேசவும் சபாநாயகர் அனுமதிப்பது இல்லை. நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்காக நான் போராடி கொண்டிருக்கிறேன். தகுதி நீக்கத்தால் எனது குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது. நான் கேள்விகள் கேட்டு கொண்டே தான் இருப்பேன். அதானி விவகாரத்தில் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன், தகுதி நீக்கம் செய்தும், சிறையில் அடைத்தும் என்னை பயமுறுத்த முடியாது. நான் பின்வாங்க மாட்டேன். அதானி குறித்த எனது பேச்சுக்கு பிரதமர் பயப்படுகிறார், அதை நான் அவரது கண்களில் பார்த்திருக்கிறேன். அதனால்தான் என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications