பெஹல்காம் தீவிரவாத தாக்குதல்.. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் உளவுத்துறை அதிகாரி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தலமான பெஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் உளவுத்துறை (ஐபி) அதிகாரியும் ஒருவர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் பணியாற்றி வந்த இந்த அதிகாரி, விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க காஷ்மீர் சென்றிருக்கிறார். அங்கு குடும்பத்தினர் முன்னிலையில் அவர் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.

காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் பெஹல்காம் பகுதியும் ஒன்று. இந்த பகுதியில் புகழ்பெற்ற துலியன் ஏரி இருக்கிறது. இது மலைக்கு மேல் அமைந்திருக்கிறது. இதன் அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இப்படி வரும் பயணிகள் பெஹல்காமிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று அங்கிருந்து ஏரிக்கு போவார்கள். இந்த பைசாரன் பள்ளதாக்குக்கு நடந்து அல்லது குதிரை மீது ஏறிதான் போக முடியும்.
இந்த பள்ளத்தாக்கு பகுதியில்தான் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மலைப்பகுதியிலிருந்து திடீரென பள்ளத்தாக்குக்கு இறங்கி வந்த அவர்கள் கண்ணில் பட்ட சுற்றுலா பயணிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடந்த இடம் திறந்தவெளி பகுதி என்பதால் பயணிகளால் ஓடி ஒளிய முடியவில்லை. இந்த தாக்குதலில் 26-28 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் 2 பேர் வெளிநாட்டு பயணிகள். கொல்லப்பட்டவர்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் ஒருவர் உளவுத்துறை அதிகாரி என்பது தெரிய வந்திருக்கிறது. பீகாரை பூர்வீகமாக கொண்ட மனீஷ் ரஞ்சன் எனும் உளவுத்துறை அதிகாரி, கடந்த 2 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். கோடை விடுமுறைக்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் பைசாரன் பள்ளத்தாக்குக்கு வந்திருக்கிறார். அங்கு நடந்த துப்பாகிக்சூட்டில் ஒரு குண்டு அவரை துளைத்துள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 47 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைப்பெறும் இரண்டாவது மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கிறது. மட்டுமல்லாது 1990க்கு பிறகு சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதலாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த கொலைவெறி தாக்குதலுக்கு 'தி ரெசிஸ்டன்ட் ஃபிரன்ட்' எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பாகும்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்திருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடத்திருப்பது சர்வதேச அளவில் விவாதமாக மாறியிருக்கிறது. சம்பவத்தையடுத்து ராணுவத்தினர் தீவர தேடுதல் வேட்டையை தொடர்ந்திருக்கின்றனர். சிலர் இதனை பாகிஸ்தானின் தாக்குதல் என்று விமர்சித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications