"எல்லையில் ராணுவ வீரர்கள்.. யாரையும் சும்மா விட மாட்டோம்!" சீனாவுக்கு மெசேஜ் அனுப்பும் ராஜ்நாத் சிங்
டெல்லி: அமெரிக்கா சென்றுள்ள இந்தியா பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனா தாக்குதல் மற்றும் இந்திய வீரர்கள் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், கல்வான் தாக்குதல் தொடர்பாக சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ராஜ்நாத் சிங்
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், "இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள், நாங்கள் (அரசு) என்ன முடிவுகளை எடுத்தோம் என்பது குறித்து என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நமது வீரர்கள் யாரையும் விட்டுவைக்க மாட்டார்கள். இந்த செய்தி சீனாவுக்குச் சென்று சேர்ந்துவிட்டது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

சீனா சம்பவம்
கடந்த 2020 மே மாதம் பாங்காங் ஏரி அருகே இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்குப் பல மாதங்களாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்து வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த 2020 ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு துருப்புக்களும் மோதிக்கொண்டனர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல சீன தரப்பில் உயிரிழப்புகள் இருந்ததாகக் கூறப்பட்டது. இரு தரப்பிற்கும் இடையே 15 சுற்றுகளாக ராணுவப் பேச்சுவார்த்தை நடந்த பின்னரே, பதற்றம் சற்றே குறைந்தது.

இந்தியாவைத் தடுக்க முடியாது
அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோவில் இந்திய- அமெரிக்கச் சமூகத்தினரிடம் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து உள்ளது. விரைவில் உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழும். இந்தியாவின் பிம்பம் மாறிவிட்டது. இந்தியாவின் கவுரம் உலக அரங்கில் அதிகரித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளாக இந்தியா வருவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

வெளியுறவுக் கொள்கை
எந்தவொரு இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஒரு நாடு மட்டும் அதிக இழப்புகளை எதிர்கொள்ளக் கூடாது. இந்தியா ஒரு நாட்டோடு நல்ல உறவை வைத்திருந்தால், வேறு எந்த நாட்டுடனும் அதன் உறவு மோசமடையும் என்று அர்த்தமல்ல. இந்த மாதிரியான வெளியுறவுக் கொள்கையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இந்தியா ஒருபோதும் இதைச் செய்யாது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் இரு தரப்பிற்கும் நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும்" என்றார்.

அமைச்சர்கள் சந்திப்பு
உக்ரைன் நாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கும் முடிவு குறித்து அமெரிக்கா அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்து. அமெரிக்க 2+2 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications