Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாடு ஒரே தேர்தல் அமலுக்கு வந்தால் சோவியத் யூனியன் போல இந்தியா சிதறுண்டு போகும்: வைகோ எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு அமல்படுத்தினால் இந்தியா என்ற நாடு, முந்தைய சோவியத் யூனியன் போல பல நாடுகளாக சிதறுண்டு போகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக எச்சரித்துள்ளார். அனைத்திந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பேசிய வைகோ இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அனைத்திந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் திமுக எம்பி வில்சன் தலைமையில் டெல்லியில் 3-வது தேசிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைவர்களின் கருத்துகளின் தொகுப்பு:

vaiko

சிபிஐ பொதுச்செயலாளர் தீபாங்கர் பட்டாச்சாரியா: பெண்களுக்கு சம அதிகாரமளித்தல், இடஒதுக்கீட்டை அதிகரிப்பது மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய சமூக நீதியுடன் நமது மண்ணை ஜனநாயகப்படுத்த வேண்டும்.

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்: சாதி, நம்பிக்கை, மொழி, இடத்தின் பெயரால் தேசத்தை இத்தனை வருடங்களாகப் பிரித்தது ஆர்எஸ்எஸ் அமைப்பு. அந்த அமைப்பின் தலைவர்கள் யாரும் தாழ்த்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரவில்லை. அவர்கள் தான் இந்துக்களின் பாதுகாவலர்கள் என பேசி வருவது வேடிக்கையாக உள்ளது. சாதிவாரி மக்கள் தொகை குறித்த புள்ளி விவரங்கள் தெரியாவிட்டால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உருவாகும்; அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாமல் போகும்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி பி.எல். ஹரிபிரசாத்: இடஒதுக்கீடு தகுதி மற்றும் திறமையை சமரசம் செய்யும் என்று இடஒதுக்கீட்டிற்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த பிரச்சாரத்தின் படி பார்த்தால் 69% இடஒதுக்கீடு உள்ள தமிழகம் வளர்ச்சியடையாமல் இருக்க வேண்டும். ஆனால், சமூக வளர்ச்சிக்கான குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இடஒதுக்கீட்டுன் முன் மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதால் அந்த மாநிலங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இத்தகைய மாநிலங்கள் தான் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலம் அதிக வருவாயை வழங்கி வருகின்றன. வரியில் பங்களிக்க மாநிலங்கள் தயாராக இருந்தாலும் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நீதியும் கிடைக்காத நிலை இந்தியாவில் உள்ளது. உலகில் தீண்டாமை எங்கும் நடைமுறையில் இல்லாத நிலையில் இங்கு மட்டும் தான் உள்ளது; சாதியின் பெயரால் தீண்டாமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் வடக்குப் பகுதிகளைச் சேர்ந்த ஓபிசி தலைவர்கள் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். பெரியார், நாராயண குரு, பசவண்ணா டிஎன்ஏ ரேவண்ணா, பூலே ஆகியோர் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை பாதுகாத்து வருகின்றனர். இட ஒதுக்கீடு என்பது தொண்டு அல்லது வறுமை ஒழிப்பு திட்டமல்ல. அது சமத்துவம்.

தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்பி மஸ்தான் ராவ்: ஜாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியம். அனைத்து துறைகளிலும் ஓபிசி பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த வேண்டும்; அவர்கள் வாழ்வாதரத்தை உயர்த்த வேண்டும். அந்த முயற்சியை தேசிய ஓபிசி வர்த்தக சபை ஏற்கனவே செய்து வருகிறது. இடஒதுக்கீடு, சமூக நீதியை பெற தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எம்பி வில்சன் எடுத்து வரும் முயற்சிகள் மிகவும் மெச்சத்தக்கது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி பௌசியா தஹ்சீன் அகமத்கான:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் போதெல்லாம் நீதி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் நமக்குத் தேவை. அதற்காக நீதித்துறையில் சீர்திருத்தங்கள் இன்னும் தேவைப்படுகிறது. அதற்கு மாநில அரசுகள் முன் வர வேண்டும். பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்பது பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனைகள். எம்பி வில்சன் நடத்துவது போன்ற சமூக நீதி மாநாடுகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடத்த வேண்டும். இடஒதுக்கீட்டில் நீதித்துறை அரசியல் சாசனத்தின் அடைப்படையில் முடிவெடுக்க வேண்டும். மாறாக எந்த கடவுள் அல்லது எந்த நம்பிக்கையையும் கேட்டு முடிவெடுக்கு கூடாது. ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்துகிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி: மதச்சார்பின்மையை சமூக நீதியின் மூலம் வளர்த்தது திராவிட இயக்கம் தான். சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் மக்கள் நிலையை தெரிய வைப்பதால், அதற்கேற்ப கொள்கைகளை உருவாக்க அது வழி வகுக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை மத்திய பாஜக அரசு வலியுறுத்தினால், சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவிலும் நடக்கும், இந்தியாவை பிளவுப்படுத்தும் என எச்சரிக்கிறேன் என்றார்.

சிபிஎம் பிருந்தா காரத்: உச்ச நீதிமன்ற உத்தரவின் படி 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு என்பதை அகற்ற வேண்டும். பின்நுழைவு என்ற பெயரில், காலியிடங்களை ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்தவர்களை கொண்டு நிரப்பத் திட்டமிட்டு வருகின்றனர். அதேசமயம், ஒதுக்கப்பட்ட பிரிவுகளில் உள்ள பின்னடைவு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

ராஷ்டிரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ்: ஜார்கண்டில் நாங்கள் கூட்டணியாக போராடி வெற்றி பெற்றோம். டெல்லி மற்றும் பீகாரில் தேர்தல் வரும்போது, ​​கூட்டணியாக போட்டியிடுவோம், அந்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: இட ஒதுக்கீடு அதிசயமாக நடந்ததா? இல்லை. மக்களை ஒருங்கிணைத்தால் நடந்தது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் இடஒதுக்கீட்டை பெற்று கொடுக்க வேண்டும். இடஒதுக்கீடு நமது உரிமை; அது சலுகை அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி அது நமக்குச் சொந்தமானது.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா: பெண்கள் மற்றும் ஓபிசியினருக்கு தங்கள் அரசு நிறைய செய்துள்ளது. ஓபிசிக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினோம்; குழந்தைகள் கல்வியை நிறுத்தாமல் இருப்பதை உறுதி செய்தோம், பெண்கள் புர்கா அணிந்து வீட்டில் எப்போதும் உட்கார வேண்டாம் என்று தெரிவித்தோம். பிளவுகளைத் தொடர்ந்தால் இந்தியாவை எப்படி வலிமையாக்க முடியும். நிலத்தை கூட முஸ்லிம்கள் பறித்துவிடுவார்கள் என்று சிலர் அச்சத்தை உருவாக்கினர். ஆனால் வேறு கலாச்சாரமாக இருந்தாலும் தமிழ்நாட்டையும் ஜம்மு காஷ்மீரையும் இணைத்ததுள்ளது சமூக நீதி என்ற கொள்கை தான். இந்தியாவை வலிமையாக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியா மீண்டும் பிரகாசிக்கும், இந்த இருள் மேகம் நீங்கும்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்: மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த, ஆயிரக்கணக்கான சமாஜ்வாதி கட்சியினர் போராடி சிறை சென்றனர். அனைவருக்கும் எல்லாம் என்ற இலக்கை அடைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் எங்கள் கட்சி கைகோர்த்து போராடும்.

விசிக தலைவர் திருமாவளவன்: ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதிக்கான நோக்கத்தை முழுமையாக அடைய முடியாது என்பதால் சமூக நீதியை அடைய எந்த எல்லைக்கும் செல்வோம்.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமன் சோரன்: முலாயம் சிங் யாதவ், கருணாநிதி போன்ற தலைவர்கள் மக்களுக்கு சமூக நீதி கிடைக்க எப்படி போராட வேண்டியிருந்தது என்பதை அகிலேஷ் யாதவ் விவரித்தார். சமூக நீதியை பெறுவதற்கான நீண்ட போர் இன்னும் முடிவடையவில்லை.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்றியமையாதது, சாதிகளை கணக்கெடுக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எது அளவிடப்படுகிறதோ அது மட்டுமே நன்றாக நிர்வகிக்கப்படும். விரிவான சாதி தரவு இல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது நலனில் இட ஒதுக்கீடு போன்ற உறுதியான செயல்களை திறம்பட செய்ய முடியாது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்:
பாஜக தூண்டுதலால் சில அரசியல் கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுக்கும் பொறுப்பை மாநில அரசுகள் மீது சுமத்தி வருகின்றன. இது தாமதப்படுத்தும் தந்திரம். இடஒதுக்கீடு என்பது சமூக நீதியின் முக்கிய தூண், எந்த விலை கொடுத்தேனும் அதை பாதுகாக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+