சோனியா, ராகுல் கைது செய்யப்பட்டால் காங். இடைக்கால தலைவர் ப.சிதம்பரம்? காமராஜருக்கு பிறகு வாய்ப்பு?
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டால் காங்கிரஸின் புதிய இடைக்கால தலைவராக மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பங்குகளை யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் முறைகேடுகள் நடந்துள்ளன; சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்பது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குகள். இதில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சோனியா, ராகுல் காந்தியிடம் அண்மையில் சுமார் 50 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
சோனியா, ராகுல் காந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் போராட்டம் நடத்தி கைதாகினர். இதனைத் தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு, யங் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு இரு அலுவலகங்களும் சீல் வைக்கப்பட்டன.
நேஷனல் ஹெரால்டு வழக்கு.. காங்கிரஸ் கார்கேவுக்கு கிடுக்கிப்பிடி.. 7 மணிநேரம் விசாரித்த அமலாக்கத்துறை
மேலும் டெல்லியில் திடீரென சோனியா, ராகுல் காந்தி வீடுகள், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பாக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதனால் சோனியஆ, ராகுல் காந்தி இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் பரவின. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி இருவருக்கும் சிறை தண்டனை உறுதி என திட்டவட்டமாக கூறி வருகிறார் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழக்கை கையில் எடுத்தவர் சுப்பிரமணியன் சுவாமி.
இதனிடையே சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் புதிய இடைக்கால தலைவர் யார் என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், காங்கிரஸ் இடைக்கால தலைவராக வாய்ப்புள்ளது என்கிறது பிபிசி ஊடகம். மேலும் 1964-65; 1966-67-ல் தமிழகத்தைச் சேர்ந்த முதுபெரும் தலைவர் காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார்; அவருக்குப் பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் காங். தலைவராகக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.