இளையராஜா.. அன்னைக்கு பதவியேற்றதோடு சரி.. ஒருநாள்கூட மாநிலங்களவைக்கே போகலயாமே.. "பூஜ்ஜியம்" ரிப்போர்ட்
இளையராஜா குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது
டெல்லி: மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக பதவியேற்ற இசையமைப்பாளர் இளையராஜா, ஒரு நாள் கூட மாநிலங்களவை குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத தகவல் வெளியாகியுள்ளது.. அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக இருக்கிறதாம்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்..
அந்தவகையில், மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த வருடம், ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர்.
என் தாயும் இப்படித்தான்! உலகில் வேறெங்கும் காணமுடியுமோ? பிரதமர் மோடி தாயார் பற்றி இளையராஜா உருக்கம்!
அடையாளம்
தமிழ் திரையிசையின் அடையாளத்தை மாற்றிய இளையராஜாவுக்கு இந்த நியமன பதவி வழங்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது.. மொத்தம் 13 நாட்கள் வரை அக்கூட்டத்தொடர் நடந்தது.. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, நியமன எம்பிக்களில் தடகள வீராங்கனை பிடி உஷா மட்டும், 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார்.. அத்துடன் ஒரு விவாதத்திலும் அவர் கலந்துகொண்டுள்ளார்..
பூஜ்ஜிய ரிப்போர்ட்
அதேபோல, வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்... ஆனால், தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கேற்கவில்லையாம். அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்பட்டபோது, அதாவது கடந்த ஜூலையில் நடந்த கூட்டத்தொடரில், முதல் நாளான மாநிலங்களவையில், புதியதாக தேர்வு செய்யப்பட்ட நியமன எம்பிக்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது....
பூஜ்ஜியம்
இளையராஜாவிற்கு எம்பி பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்ததால், அவரால் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இதையடுத்து, மாநிலங்களவை எம்பியாக இளையராஜா பதவியேற்று கொண்டார்.. தமிழில் பதவியேற்றுக் கொண்ட அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி அப்போது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்..
கடவுளின் பெயரால்
"கடவுளின் பெயரால்" என்று தமிழில் சொல்லி, இளையராஜா அப்போது பதவியேற்று கொண்டார்.. குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற நாளில்தான் இளையராஜாவும் பதவியேற்று கொண்டார். இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவை இளையராஜா ஒரு நாள் கூட கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்பதும், அதுகுறித்து அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.