ஜூன் ஜூலையில் குறைந்த மழை... ஆக., செப்டம்பரில் சூடு பிடிக்குமா.. விவசாயம் செழிக்குமா?
டெல்லி: நடப்பு தென்மேற்கு பருவமழையில் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இயல்பான மழையே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் நீண்ட நாட்களில் 97 சதவீத மழை இருக்கும் என்றும், இதில் 9 சதவீதம் கூடலாம் அல்லது குறையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தென்மேற்கு பருவ மழை காலங்களான, ஜூன், ஜூலை மாதங்களில் வடநாட்டில் 18 சதவீதம் குறைந்து இருந்ததாகவும், மத்திய இந்தியாவில் 4 சதவீதம் குறைந்து இருந்ததாகவும், தென் மாநிலங்களில் 12 சதவீதம் குறைந்து இருந்ததாகவும், அதுவே கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 12 சதவீதம் அதிகரித்து இருந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருவதாலும், விவசாயத்திற்கு என்று கூலி ஆட்கள் அதிகமாக தற்போது கிடைப்பதாலும், கடந்தாண்டில் ஜூலை மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டில் 14 சதவீதம் கூடுதலாக காரிப் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. வேர்க்கடலை, ஆமணக்கு, கொண்டைக்கடலை, உளுந்து, தினை ஆகியவை அதிகமாக நடவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இருக்கும் 123 அணைகளிலும் 62.92 பில்லியன் கன மீட்டர் அளவுக்கு போதிய அளவில் தண்ணீர் இருப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 141 சதவீதமும், இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 103 சதவீதம் அதிகமாகும்.

நடப்பாண்டில் அரிசி 26.66 மில்லியன் ஹெக்டேரிலும், பருப்பு வகைகள் 14.83 மில்லியன் ஹெக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 17.53 மில்லியன் ஹெக்டேரிலும், பருத்தி 12.12 மில்லியன் ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்தாண்டைக் காட்டிலும் அதிக நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications