"கத்துக்கணும்யா.. இந்தியாகிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்" - புகழ்ந்து தள்ளிய சர்வதேச நிதியம்
டெல்லி: மக்களுக்காக இந்தியா பல புதிய விஷயங்களை செய்து வருவதாகவும், இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருப்பதாகவும் சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மக்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தும் முறையை சுட்டிக்காட்டி சர்வதேச நிதியம் இவ்வாறு கூறியுள்ளது.
சர்வதேச நிதியத்தின் வருவாய் விவகாரத் துறை துணை இயக்குநர் பாலோ மாவ்ரோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

பாஜகவும், நேரடி மானியமும்..
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக பல பொருளாதார ரீதியான சீர்திருத்தங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏழை எளிய மக்களுக்கான நிதியுதவி, அனைத்து தரப்பினருக்குமான மானியம் ஆகியவை நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கே செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கோடிக்கணக்கான பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அதற்கு முன்பு வரை சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் அல்லது ரேஷன் கடைகளின் மூலமாக இந்த மானியங்கள் வழங்கப்பட்டு வந்தன. இதில் ஏராளமான குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் வந்ததை அடுத்து, நேரடியாக பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது.

இந்தியாவிடம் இருந்து கற்க வேண்டும்
இந்நிலையில், சர்வதேச நிதியத்தின் வருவாய் விவகாரத்துறை துணை இயக்குநர் பாலோ மாவ்ரோ வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சமீபகாலமாக இந்தியாவின் செயல்பாடுகளை பார்க்கும் போது, அதனிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன என்பது கண்கூடாக தெரிகிறது. அத்தனை விஷயங்களை இந்தியா செய்திருக்கிறது.

திட்டமிடப்பட்ட அதிசயம்..
மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், மக்களுக்கு நேரடியாக பணம் செலுத்தும் முறை சாத்தியப்படுத்தப்பட்டது உண்மையிலேயே வியப்பளிப்பதாக உள்ளது. அதுவும், குறைந்த வருமானம் கொண்ட கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாக பணம் செலுத்தும் திட்டம் சென்று சேர்ந்திருப்பதை ஒரு 'திட்டமிடப்பட்ட அதிசயம்' என்றுதான் சொல்ல வேண்டும்.

நிர்வாகத் திறமை
பல கோடி மக்களை கொண்டிருந்தாலும், நலத்திட்டங்களை பொறுத்தவரை இந்தியா அவர்களை தனித்தனி குழுக்களாக பிரித்துவிட்டது. அதாவது, பெண்கள், முதியவர்கள், விவசாயிகள், மாணவர்கள் என மக்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுவும் இந்தியாவின் சிறந்த நிர்வாகத் திறமையை காட்டுகிறது. மேலும் இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த திட்டங்களை செயல்படுத்த தொழில்நுட்பங்கள் ஆக்கப்பூர்வமாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. தொழில்நுட்பத்தை மக்களின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தியா நிரூபித்திருக்கிறது. இவ்வாறு பாலோ மாவ்ரோ கூறினார்.












Click it and Unblock the Notifications