இம்ரான்கான் கட்சி மாஜி எம்.எல்.ஏ. குடும்பத்துடன் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் கோருகிறார்!
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பல்தேவ் குமார் தமக்கு இந்திய அரசு அரசியல் அடைக்கலம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. சிறுபான்மையினர் கட்டாய மதமாற்றத்துக்குள்ளாக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பல்தேவ் குமார் குடும்பத்துடன் இந்தியாவிடம் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளார். இது தொடர்பாக பல்தேவ்குமார் கூறியுள்ளதாவது:
கைபர்-பக்துன்கவா மாகாண சட்டசபைக்கு பாரிகோட் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அத்தொகுதியின் புதிய எம்.எல்.ஏ. 2016-ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என் மீது பொய்யான வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் நீதிமன்றம் கடந்த ஆண்டு இவ்வழக்கில் இருந்து என்னை விடுதலை செய்தது. இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. சிறுபான்மை சமூக இளம்பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர்.
முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இதனால்தான் இந்திய அரசிடம் குடும்பத்துடன் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளோம். இவ்வாறு பல்தேவ் குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications