இப்படித்தான் 2017ல் என்ன நடந்துச்சுன்னா, லாலு கட்சியோடு கூட்டணியை முறித்த நிதிஷ்! மீண்டும் தாங்குமா?
டெல்லி: பீகார் மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த அரசே அரசியல் நிகழ்வுகள் தான் இப்போது மீண்டும் நடப்பது போல உள்ளது.
Recommended Video
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி 75 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை.
பீகார்: பாஜக கூட்டணி முறிவு- நிதிஷ்குமார் அறிவிப்பு! ஆர்ஜேடி, காங். உடன் ஜேடியூ இணைந்து புதிய அரசு?
பீகார்
பாஜக 75 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வென்று இருந்தது. இதையடுத்து பாஜக-ஜேடியு கூட்டணி ஆட்சி அமைந்தது. அதிக இடங்களைக் கொண்டு இருப்பதால் முதலில் பாஜகவைச் சேர்ந்தவருக்கே முதல்வர் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நிதீஷ்குாமரே ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருப்பார் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது.
கவிழ்ந்தது
இடையில் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் கூட்டணி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என கூறப்பட்டது. அந்த நாள் இன்று வந்துவிட்டது. பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவிக்க உள்ளார். இது தொடர்பாக அவர் பீகார் மாநில ஆளுநரையும் சற்று நேரத்தில் நேரில் சந்திக்க உள்ளார். அதேநேரம் நிதிஷ்குமார் திடீரென கூட்டணியை முறித்துக் கொள்வது இது முதல்முறை இல்லை.
2017ஆம் ஆண்டு
கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள நிதிஷ்குமார் இதேபோலத் தான் செய்தார். ஊழலற்ற ஆட்சியை ஆதரிப்பதாகக் கூறி, ஒரே நாளில் லாலு பிரசாத் உடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜக உடன் கை கோர்த்தார். அப்போது பீகார் துணை முதல்வராக இருந்த லாலுவின் மகனும் தேஜஸ்வி யாதவ் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளை நிதிஷ்குமார் காரணமாக முன்வைத்தார்.
ஊழலற்ற நிர்வாகம்
இருப்பினும், அப்போதே இந்த ஊழலற்ற நிர்வாகம் என்ற காரணத்தை ஆர்ஜேடி தலைவர்கள் கேலிக்கூத்தானது என விமர்சித்தனர். 2013ஆம் ஆண்டிலேயே லாலு மாட்டுத் தீவன வழக்கில் தண்டிக்கப்பட்டுவிட்டார். இருப்பினும், 2015இல் லாலு கட்சி உடன் தான் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்தார் நிதிஷ்குமார். முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்வே இப்படி ஊழலற்ற நிர்வாகம் என டிராமா செய்வதாக அப்போது ஆர்ஜேடி தலைவர்கள் நிதீஷை சாடி இருந்தனர்.
5 ஆண்டுகள் கழித்து
5 ஆண்டுகள் கழித்து, இப்போது மீண்டும் நிதிஷ்குமார் கூட்டணி கணக்கை மாற்றி உள்ளார். எந்தக் கட்சி மீது ஊழல் புகார்கள் இருப்பதாக சொன்னாரோ, அதே ஆர்ஜேடி கட்சி உடன் அவர் கைகோர்க்கிறார். லாலு பிரசாத் யாதவ் இப்போது கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார்,. கடந்த ஆண்டு ஜாமீன் கிடைக்கும் வரை லாலு சிறையிலேயே தான் இருக்க வேண்டி இருந்தது. ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்த சமயத்தில் எழுந்த ஊழல் புகாரில் அவரது முக்கிய உதவியாளராக இருந்த போலா யாதவை சமீபத்தில் தான் சிபிஐ கைது செய்திருந்தது.
பாஜக
பாஜகவைப் பொறுத்தவரை நிதிஷ்குமாரின் முடிவு நம்ப முடியில்லை என்றே அக்கட்சியின் தலைவர்கள் கீறுகின்றனர். இது தொடர்பாக அம்மாநில பாஜகவினர் கூறுகையில், "நாங்கள் கூட்டணியில் தொடரவே விரும்பினோம். 2024 மக்களவைத் தேர்தலில் பீகாரில் நிதிஷ்குமார் உடனேயே கூட்டணி என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். 2020 தேர்தலிலேயே நாங்கள் அதிக இடங்களைப் பெற்ற போதிலும், நிதீஷ் குமாரை முதல்வராக்கி கூட்டணி தர்மத்தையும் கடைப்பிடித்தோம். ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கிய கட்சி உடன் அவர் ஏன் கூட்டணி வைக்கிறார் என்பதை மக்களிடமே அவர் விளக்கட்டும்" என்றார்.
நிதீஷ் குமார்
2024இல் கூட்டணி தொடரும் என அமித் ஷா கூறினாலும், நிதிஷ்குமார் கட்சியினர் எவ்வித உறுதியும் அளிக்காமலேயே இருந்தனர். மேலும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் வெளியேறியது. மேலும், சமீபத்தில் டெல்லியில் நடந்த முக்கிய கூட்டங்களிலும் நிதீஷ்குமார் கலந்து கொள்ளவில்லை. நிதீஷ் குமார் அரசு முன்னெடுத்த ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை.
அடுத்து என்ன
அதேபோல பீகாரிலும் பாஜக தனது இருப்பை அதிகப்படுத்த முயன்றது. இதன் காரணமாக நிதீஷ்குமார் எப்போது வேண்டுமானாலும் கூட்டணியை முறிக்கலாம் என்ற சூழலே நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. நிதீஷ்குமார் கூட்டணியைக் கண்டிப்பாக ஒரு நாள் முறித்துக்கொள்வார் என்பது பாஜகவினருக்கே தெரியும். இருப்பினும், இந்த புதிய கூட்டணி எத்தனை காலம் தாங்கும் என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.