வெறும் 2 சிலிண்டர்களே உள்ளது.. ஆக்சிஜனுக்கு பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளோம்...டெல்லி மருத்துவமனை
டெல்லி: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் சூழ்நிலையில் உள்ளதாக அம்மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பெரும்பாலான கொரோனா மருத்துவமனைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டன.
இதுமட்டுமின்றி மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கை
இந்நிலையில், டெல்லியிலுள்ள சர் கங்கா ராம் மருத்துவமனை தங்கள் ஆக்சிஜனுக்காக பிச்சையெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களிடம் இப்போது 104 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. இவற்றை எமெர்ஜென்சி வார்டுகளில் இருந்து எடுத்து மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவோம்.

ஆக்சிஜனுக்கு போராட்டம்
இப்போது எங்களுக்கு ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னரே, எங்களிடம் உள்ள 104 ஆக்சிஜன் சிலிண்டர்களும் அவசர அவசரமாக ஆக்சிஜனை நிரம்ப மூன்று வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டன. மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜனை ஏற்பாடு செய்ய எங்கள் ஊழியர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இருப்பினும், ஒரு பயனும் இல்லை.

பிச்சை எடுக்கும் நிலை
நாங்கள் இப்போது ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளோம். இங்கு இப்போது மிக மோசமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. நாங்கள் மற்ற மருத்துவமனை நிர்வாகங்களுடன் பேசிய அவசர தேவைக்கு இரண்டு சிலிண்டர்களை மட்டுமே இப்போது ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், அவையும் விரைவாக காலியாகவுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

25 பேர் உயிரிழப்பு
மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லை என டெல்லியில் சர் கங்கா ராம் மருத்துவமனை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஒரே நாளில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான எஸ்ஓஎஸ்-ஐ சர் கங்கா ராம் மருத்துவமனை நான்கு முறை அனுப்பியுள்ளது. அங்கு நிலைமை அவ்வளவு தீவிரமாக உள்ளது. முன்னதாக கடந்த 23ஆம் தேதி இதே மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications