இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.2500! பீகாரில் "இந்தியா" கூட்டணியின் திமுக ஸ்டைல் வாக்குறுதிகள்
டெல்லி: பீகார் மாநிலத்தில் அடுத்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500 நிதியுதவி எனத் தமிழக அரசியல் கட்சிகளைப் போன்ற வாக்குறுதிகள் இடம்பெற்று இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் அடுத்த வாரம் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் ஆளும் என்.டி.ஏ கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் அங்குப் போட்டி இருக்கிறது. இதுபோக பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் புதிய கட்சியாகத் தனித்துக் களமிறங்குகிறது.

தேர்தல் அறிக்கை
இதற்கிடையே அங்கு "இந்தியா" கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தத் தேர்தல் அறிக்கையில் மொத்தம் 25 வாக்குறுதிகள் இடம் பெற்று இருந்தன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500 நிதியுதவி என தமிழகத்தில் அரசியல் அறிவிக்கும் தேர்தல் அறிக்கையைப் போலவே இந்தியா கூட்டணியின் அறிக்கையும் இருந்தது. இந்த அறிக்கையில் உள்ள முக்கியமான 10 பாயிண்டுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
வக்பு சட்டம்
1. கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்தச் சட்டம் பீகாரில் அமல்படுத்தப்படாது. இதற்கு முன்பே தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டம் குப்பையில் வீசப்படும் என்று தேஜஸ்வி தெரிவித்திருந்தார். அதை வாக்குறுதியாகவே இப்போது அளித்துள்ளனர்.
2. பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சியை அமைந்த 20 நாட்களுக்குள், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் சட்டம் இயற்றப்படும்.
3. ஜீவிகா திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்துச் சமூகப் பணியாளர்களும் நிரந்தரமாக்கப்பட்டு, அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கப்படும். அவர்களின் மாதச் சம்பளம் ரூ.30,000 ஆக நிர்ணயிக்கப்படும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவர்.
சிறப்பு மண்டலங்கள்
4. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள், சுகாதாரம், விவசாயம், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சரக்கு போக்குவரத்து, உற்பத்தி மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் திறன் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
5. சிறு மற்றும் குறு நிறுவனங்களின் நிதி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்கப்படும். மாநிலத்தில் 2,000 ஏக்கரில் கல்வி நகரம், தொழில் மண்டலம் மற்றும் ஐந்து புதிய விரைவுச்சாலைகள் அமைக்கப்படும்.
6. பீகாரில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
பெண்களுக்கு நிதியுதவி
7. 'மாய்-பெஹின் மான் யோஜனா' (Mai-Behin Maan Yojana) திட்டத்தின் கீழ், பெண்களுக்கு டிசம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும்.
8. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், கணவனை இழந்த பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 ஓய்வூதியம் வழங்கப்படும். தற்போது ஆண்டுக்கு ரூ.2,200 வழங்கப்படும் நிலையில், அது பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
9. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
10. மைக்ரோ பைனாஸ் நிறுவனங்கள் தங்கள் தவணைகளை வசூல் செய்யும்போது, பெண்கள் துன்புறுத்தப்படுவதை அதிக வட்டி வசூலிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்யவும் புதிய ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்படும்.












Click it and Unblock the Notifications