விசாரணை நடத்துங்கள்! திடீரென ரஷ்யாவை அதிர வைத்த இந்தியா.. ஐநாவில் கடும் எதிர்ப்பு.. காரணம் "புச்சா"!
டெல்லி: உக்ரைனில் புச்சா நகரத்தில் நடைபெற்ற கொலைகளுக்கு இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கண்டனம் தெரிவித்துள்ளது. இதில் ரஷ்யாவிற்கு எதிராக விசாரணை நடத்த இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
Recommended Video
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறி உள்ளன. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கீவ் தலைநகரில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு வருகிறார். சமீபத்தில் உக்ரைனின் புச்சா நகரத்தை பார்வையிட்ட அவர், அங்கு மிக மோசமான இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

உக்ரைன் புச்சா
உக்ரைனில் தலைநகரில் கீவில் இருந்து 23 கிமீ தொலையில் புச்சா நகரம் உள்ளது. இங்கு சாலை முழுக்க பல்வேறு இடங்களில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். 360க்கும் அதிகமான உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் கடுமையாக கொடுமைப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதோடு பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

புச்சா நகரம்
இன்னும் பல இடங்களில் குழந்தைகள், ஆண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. பல்வேறு வீடுகளுக்குள் மக்கள் பிணமாக கண்டெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த புச்சா கொலைகள் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று இது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

கொடூரம்
இந்த விவாதத்தில் சிறப்பு விருந்தினராக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசினார். அதில், உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலையை மேற்கொண்டு உள்ளது. புச்சா நகரத்தில் நான் பார்த்த காட்சிகள் எனக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளன. ரஷ்யாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த கவுன்சிலை கலைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்
இந்த நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய இந்தியாவின் நிரந்தர தூதர் டி எஸ் திருமூர்த்தி, உக்ரைனில் புச்சா நகரத்தில் நடைபெற்ற கொலைகளை இந்தியா கண்டிக்கிறது. இதற்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்டு இருக்கும் விசாரணை முன்னெடுப்பிற்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. புச்சா கொலைகள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தும் முடிவை இந்தியா ஆதரிக்கிறது.

கவலை தரும் கொலைகள்
புச்சாவில் நடைபெற்ற கொலைகள் கவலை அளிப்பதாக உள்ளன. இந்த போரை மனிதத்தன்மையோடு அணுக வேண்டும் . ஆனால் அங்கு மேற்கொள்ளப்பட்ட அமைதி நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கி உள்ளது. அமைதியை மேலும் குழைத்து உள்ளது. , மனிதநேயம், நடுநிலைமை, பாரபட்சமற்ற தன்மை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நாம் செயல்பட வேண்டும்.

சர்வதேச பாதிப்பு
இந்த போர் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு சர்வதேச அளவில் உணரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உணவு மற்றும் எரிபொருள் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போருக்கு விரைவில் தீர்வு கொண்டு வர வேண்டும். அதுவே இந்தியாவின் விருப்பம். போருக்கு இடையே மக்களுக்கு உதவி செய்ய போதுமான வழிகளை ஏற்படுத்த வேண்டும். உணவுகள், மருந்துகளை கொடுத்து போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வழி ஏற்படுத்த வேண்டும்.

அமைதி தேவை
இந்த போரில் உடனடியாக அமைதி ஏற்பட தேவையான முன்னெடுப்புகளை செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என்று டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்தார். இதற்கு முன் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐநா அவையில் நடைபெற்ற எந்த கூட்டத்திலும் இந்தியா ரஷ்யாவை கண்டிக்கவில்லை. ரஷ்யாவிற்கு எதிராக வாக்கும் அளிக்கவில்லை. ஆனால் முதல்முறை புச்சா நகரத்தில் நடைபெற்ற கொலைகளை இந்தியா விமர்சனம் செய்ததோடு ரஷ்யாவை கண்டித்துள்ளது.

புது நிலைப்பாடு
இந்தியாவின் இந்த புதிய நிலைப்பாடு ரஷ்யாவிற்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது. அதே சமயம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்னொரு நிரந்தர உறுப்பினரா சீனா, இந்த கொலைகளை கண்டிக்கவில்லை, மாறாக இது கவலை அளிப்பதாக இருப்பதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவோ, இந்த கொலைகள் பற்றி வெளியாகும் புகைப்படங்கள் எல்லாம் ஏமாற்று வேலை. அவை உண்மை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications