இன்று திடீரென அலறும் செல்போன்.. மிரள வைக்கும் சத்தம்! உங்க போனுக்கு மெசேஜ் வந்தால் பதற வேண்டாம்!
டெல்லி: நமது நாட்டில் எமர்ஜென்சி காலத்தில் பொதுமக்களிடம் சரியான நேரத்தில் எச்சரிக்கையை கொண்டு செல்லும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி அவசரக்கால தகவல் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று, மே 2, 2026 சனிக்கிழமை அன்று நாடு தழுவிய அளவில் 'செல் பிராட்காஸ்ட்' (Cell Broadcast) எச்சரிக்கை அமைப்பைச் சோதனை செய்கிறது.
இன்று உங்கள் மொபைல் போனில் திடீரென ஒரு எச்சரிக்கை செய்தி வரலாம்.. அதனுடன் ஒரு பெரிய சத்தமும், அதிர்வும் ஏற்படலாம். இதைப் பார்த்து அதிர்ச்சியடையத் தேவையில்லை. இது ஒரு சோதனை மட்டுமே என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாடு முழுக்க எமர்ஜென்சி காலத்தில் பொதுமக்களைத் தொடர்பு கொள்ளும் அமைப்பைத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சோதனைசெய்யும் நிலையில், இதன் காரணமாகவே உங்களுக்கும் செல்போனில் அலர்ட் மெசேஜ் வரும்.

டெல்லி உட்பட மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. அதேநேரம் எல்லைப் பகுதிகள் மற்றும் தேர்தல் மாநிலங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
செல் பிராட்காஸ்ட்
சாதாரண எஸ்.எம்.எஸ் மெசேஜ்களை போல இல்லாமல்.. ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் இந்த எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்படும். இதன் மூலம் பேரிடர் காலங்களில் நெட்வொர்க் நெருக்கடி இருந்தாலும், சில நொடிகளில் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடையும். சுனாமி, நிலநடுக்கம், மின்னல் பாதிப்பு அல்லது எரிவாயு கசிவு போன்ற அவசர காலங்களில் மக்களை எச்சரிக்க இது பயன்படும். இது 'சி-டாட்' (C-DOT) நிறுவனத்தால் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம். இது 'சச்செட்' என்ற தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கவனிக்க வேண்டியவை
- பதற வேண்டாம்: இந்தச் செய்தி வந்தால் எந்தப் பதட்டமும் அடையத் தேவையில்லை; இது வெறும் சோதனை ஓட்டம் மட்டுமே.
- பதில் தேவையில்லை: இந்தச் செய்திக்கு நீங்கள் எந்தப் பதிலும் அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
- ஒன்றுக்கு மேற்பட்ட முறை: வெவ்வேறு நெட்வொர்க் கோபுரங்கள் சோதிக்கப்படுவதால், சிலருக்கு இந்த எச்சரிக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வரலாம்; இது சாதாரணமான ஒன்றுதான்.
- பல மொழிகளில்: இந்தச் சோதனை செய்திகள் ஆங்கிலம், இந்தி மற்றும் அந்தந்தப் பிராந்திய மொழிகளில் (தமிழ் உட்பட) வரக்கூடும்.
செட்டிங்ஸ் பார்ப்பது எப்படி?
உங்கள் போனில் 'Cell Broadcast' வசதி ஆன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சோதனை செய்தி வரும். இதற்காக Settings > Safety and Emergency > Wireless Emergency Alerts > Test Alerts என்ற பகுதிக்குச் சென்று இதைச் சரிபார்க்கலாம்.
ஏன் முக்கியம்
இயற்கைப் பேரிடர்களின் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதே மிகப் பெரிய சவாலாக இருக்கும். அதை முறியடிக்க அரசு எடுத்துள்ள இந்த 'செல் பிராட்காஸ்ட்' முயற்சி வரவேற்கத்தக்கது. ஒரு உயிரைக் காக்க சில நொடிகள் முன்னதாகக் கிடைக்கும் எச்சரிக்கை மிக அவசியமானது. ஏற்கனவே ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் உள்ளன. எமர்ஜென்சி காலத்தில் பல லட்சம் மக்களைக் காக்க இது உதவுகிறது. அப்படியொரு தொழில்நுட்பத்தைத் தான் இப்போது நாமும் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளோம்.!














Click it and Unblock the Notifications