இந்தியாவில் 16% தொட்ட பாசிட்டிவ் விகிதம்.. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நிலைமை மோசம்.. அடுத்து என்ன
டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஒரே நாளில் சுமார் 2.68 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கூட தாண்டியது. இருப்பினும், அதன் பிறகு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது.
இருப்பினும், ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர் நிலைமை மீண்டும் மோசமாகத் தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பும், பாசிட்டிவ் விகிதமும் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் உச்சத்தில் கொரோனா.. கடும் உஷார் நிலை.. அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு!
2.68 லட்சம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.67 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 3.85% பேர், அதாவது 14,17,820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றைவிட 1.45 லட்சம் அதிகமாகும். அதேபோல நாட்டில் இதுவரை 6041 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.
பாசிட்டிவ் விகிதம்
ஒரே நாளில் 1,22,684 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இருந்த போதிலும், புதிய கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் குணமடைவோர் விகிதம் 94.83%மாக குறைந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 402 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த பசிட்டிவ் விகதமும் 16.66% அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை நாட்டில் 156 கோடி கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
5 மாநிலங்கள்
மாநில வாரியாக பார்க்கும்போது மகாராஷ்டிராவில் தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. அங்கு ஒரே நாளில் 43,211 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கர்நாடகாவில் 28,723 பேருக்கும் டெல்லியில் 24,383 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்து தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 23,459 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் 22,645 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அதிகரிக்கும் கேஸ்கள்
குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் பாசிட்டிவ் விகிதம் 30ஐ கடந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த ஓமிக்ரான் பாதிப்பு தீவிர வைரஸ் பாதிப்பை பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை. இருந்தாலும் கூட இவை மின்னல் வேகத்தில் பரவுவதால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. இதனால் வேக்சின் போடாதவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் உயிரிழக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.