கொரோனா சுனாமியில் சிக்கித்தவிக்கும் இந்தியா-நிமிடத்திற்கு 2 மரணங்கள், வினாடிக்கு 4 புதிய தொற்றுக்கள்
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தி வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் 3.86 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 3,498 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
டெல்லி: இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு இரண்டு கொரோனா மரணங்கள் நிகழ்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விநாடிக்கு 4 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 3,498 புதிய இறப்புகளில், 77.44 சதவீதம் 10 மாநிலங்களைச் சேர்ந்தவை என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் நேற்று 3,86,452 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,87,62,976 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து 1,53,84,418 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2,97,540 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 3,498 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் 65.41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கடந்த 10 நாட்களில் 31.46 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ள வழக்குகளில், 10 மாநிலங்கள் 73.05 சதவீத சுமைகளைக் கொண்டுள்ளன - மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான்.

3,498 பேர் மரணம்
ஏப்ரல் 21 முதல், இந்தியா சராசரியாக நிமிடத்திற்கு இரண்டு இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது. வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 3,498 புதிய இறப்புகளில், 77.44 சதவிகிதம் 10 மாநிலங்களைச் சேர்ந்தவை.

ஒரு மணி நேரத்திற்கு 32 பேர்
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 771 பேர் மரணமடைந்தனர். டெல்லியில் 395 பேர் மரணமடைந்தனர். மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிரா ஒரு மணி நேரத்திற்கு 32 இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது, அதே நேரத்தில் தேசிய தலைநகரம் மணிக்கு 16 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்கிறது.

பலியாகும் உயிர்கள்
மகாராஷ்ட்ராவில் 66,159 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் கேரளா 38,607 தொற்றுகளுடன் உள்ளது. 3ம் இடத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 35,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரண விகிதத்திலும் மகாராஷ்டிரா கடந்த 24 மணி நேரத்தில் 771 பேர் கொரோனா உயிரிழப்புகளில் முதலிடம் வகிக்கிறது. டெல்லியில் 395 பேர், உத்தரபிரதேசத்தில் 298 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்தியா முதலிடம்
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களில் நான்கில் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7 நாட்களில் இந்தியாவின் சராசரி கொரோனா மரணம் நாளொன்றுக்கு 2,882 என்று உலகிலேயே அதிகமாக உள்ளது. அமெரிக்கா, இந்தியா பிரேசில், மெக்சிகோ, பிரிட்டன் ஆகிய நாடுகள் கொரோனா மரணங்களில் முதல் 5 இடங்களில் உள்ள நாடுகள் ஆகும்.

உலகில் 4ல் 1 இந்தியாவில் மரணம்
ஏப்ரல் 28ஆம் தேதி கணக்கெடுப்பின்படி உலகில் நிகழும் மரணங்களில் நான்கில் ஒன்று இந்தியாவில் நிகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications