விண்வெளி சுற்றுலாவை கட்டுப்படுத்தும் சட்டங்களை உருவாக்கும் திட்டமில்லை.. லோக்சபாவில் அமைச்சர் தகவல்
டெல்லி: இந்தியாவில் விண்வெளி சுற்றுலாவை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் ஏதும் உருவாக்கும் ஐடியா தற்போதைக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக சுற்றுலா செல்வது என்றாலே பெரும்பாலானோருக்கு விருப்பம் தான். உள்ளூர் முதல் வெளிநாடு வரை என தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு மகிழ்ச்சியுடன் சுற்றுலா செல்வதில் பலருக்கு ஆர்வம் உண்டு.

ஆனால் ஒருசிலருக்கு யாருமே சென்றிடாத புதுப்புது இடத்தை கண்டுபிடித்து அங்கு சுற்றுலா செல்வதில் அதீத ஆர்வம் உண்டு. அந்த வகையில், தற்போது பலர் விண்வெளிக்கு சுற்றுலா செல்வதில்
ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர். தற்போதைய நவீன காலத்தில் விண்வெளி சுற்றுலா உலகில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. ஜீரோ புவி ஈர்ப்பு விசை உள்ள இடத்திற்கு அழைத்து செல்வதோடு, பூமியை அதன் வெளிவட்டத்தில் இருந்து காணும் வாய்ப்பை அளிப்பதால் இந்த விண்வெளி சுற்றுலா அதிக அளவில் பிரபலம் அடைந்து வருகிறது.
அந்த வகையில், தற்போது அதிகளவில், இந்த துறையில் தனியார் விண்வெளி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க் நிறுவிய SpaceX விண்வெளி சுற்றுலா சந்தையில் முன்னணியில் உள்ளது. அதோடு, ஜெஃப் பெசோஸ் தலைமையிலான ப்ளூ ஆரிஜின் நிறுவனம், ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக் ஆகிய நிறுவனங்கள் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
எதிர்காலத்தில் இது போன்ற விண்வெளி சுற்றுலா திட்டத்தை தொடங்குவதற்கான திறனை இஸ்ரோ மேம்படுத்தி வரும் நிலையில், விண்வெளி சுற்றுலாவை கட்டுப்படுத்தும் சட்டங்களை உருவாக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் லோக்சபாவில் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், தற்போதைக்கு இஸ்ரோ ககன்யான் திட்டத்துக்கான தொழில்நுட்பங்களை மட்டுமே உருவாக்கி வருகிறது. வருங்காலத்தில் இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலாவைத் தொடங்க கட்டுமானப் பொருட்களாக செயல்படும். ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளிப் பயணங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்பு நெறிமுறைகளை இந்தியா உருவாக்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். இஸ்ரோ தனது விண்வெளி சுற்றுலா திறனை மேம்படுத்த உள்ளதாக அறிவித்த மறுநாளே மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, விண்வெளி சுற்றுலாத்துறையில் உள்நாட்டு திறன்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக விண்வெளி துறை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications