எந்த நாட்டை விடவும் இந்தியாவிற்குதான், ரஷ்யா அதிக ஒத்துழைப்பு! மோடியுடனான சந்திப்பில் புடின் பேச்சு
டெல்லி: இந்தியா ஒரு சக்தி மிக்க நாடு, அதனுடன் ரஷ்யாவின் உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்று அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே ஆண்டுதோறும் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த மாநாடு நடைபெறவில்லை. ஒத்திவைக்கப்பட்ட அந்த சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது.
நாகாலாந்து: 3 முறை ராணுவம் துப்பாக்கிச் சூடு - பொதுமக்கள் 14 பேர் பலி- அமித்ஷா விளக்கம்
இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வந்துள்ளார். டெல்லியில் உள்ள, ஹைதராபாத் ஹவுஸ் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளாடிமிர் புடின் இருவரும் சந்தித்து பேசினர். 2019ம் ஆண்டுக்கு பிறகு இரு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக் கொள்வது இதுதான் முதல் முறை என்பதால் இந்த சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முக்கியமான பயணம்
ரஷ்ய அதிபரின் இந்திய பயணம் மிகவும் குறுகிய நேரம் கொண்டது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், கடந்த இரண்டு ஆண்டுகளாக புடின் எந்த வெளிநாட்டு மண்ணுக்கும் சென்றதில்லை. கொரோனா தொற்றுநோய் காரணமாக, புடினால் G-20 மற்றும் COP26 போன்ற உலகளாவிய மாநாடுகளில் கூட பங்கேற்க முடியவில்லை. இந்த ஆண்டு, அவர் ஜூன் 16 அன்று ஜெனீவாவுக்குச் சென்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சிறிது நேரம் சந்தித்து பேசியிருந்தார். ஆனால் ஜோ பிடனை அமெரிக்காவில் சந்திக்கவில்லை. மூன்றாவது நாட்டில்தான் சந்தித்தார். ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஒரு தலைவரை அவர் சொந்த மண்ணில் விளாடிமிர் புடின் சந்தித்து பேசியது இந்திய பிரதமர் நரேந்திர மோடியைதான் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ரஷ்ய சூழ்நிலை
ரஷ்யாவில் பரபரப்பான பல சூழல்கள் நிலவி வரும் வேளையில் அதிபர் புதினின் இந்த பயணம் நடைபெற்றது. உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன, மேலும் ரஷ்யாவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் புதின் இந்தியா வர நேரம் ஒதுக்கியுள்ளார்.
அமைச்சர்கள் சந்திப்பு
இரு நாட்டு, தலைவர்களின், இந்த சந்திப்புக்கு முன்னதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மோடி பேச்சு
விளாடிமிர் புடினுடனான சந்திப்பின்போது, பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா-ரஷ்யா இடையிலான நட்பு நிலையானது, நம்பகமானது, தனித்துவமானது. இந்த உறவுகளின் வளர்ச்சி வேகத்தில் எந்த மாற்றமும் கிடையாது. கொரோனா தொற்று காலம், சவால்களை ஏற்படுத்திய போதிலும் இரு நாடுகளின் உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
சிறந்த நண்பன்
சிறந்த நண்பன் இந்தியா என்று, அதிபர் புடின் புகழாரம் சூட்டினார். அவர் மேலும் கூறுகையில், இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகள் எந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வலுவாக இருக்கும், இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் உயர் தொழில்நுட்ப சாதனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். வேறு எந்த நாட்டுடனும் இல்லாத வகையில் ராணுவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுடன் ரஷ்யா ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இரு நாடுகளின் வர்த்தக மதிப்பு 38 பில்லியன் டாலராக உள்ள நிலையில், ரஷ்ய தரப்பிலிருந்து மேலும் முதலீடுகள் செய்யப்படும், என்று தெரிவித்தார். இரு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, ராணுவம், வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விண்வெளி, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 10 ஒப்பந்தங்களும் இவ்விரு நாடுகள் இடையே இன்று கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான ரஷ்யாவின் ஆழமான உறவை இதன் மூலம், அறியலாம்.