3 ஆண்டுகளில் ஒரு ப்ளே ஆப் கூட இல்லை.. ருதுராஜிடம் இருந்து கேப்டன்சி பறிப்பு? உடைத்து பேசிய பிளெமிங்
சென்னை: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்தாண்டும் சிஎஸ்கே அணியின் ப்ளே-ஆஃப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஃபார்ம் மற்றும் அவரது கேப்டன்சி எதிர்காலம் குறித்துச் சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி ஹைதராபாத்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இனி எதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே சென்னையால் அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும். இந்தத் தொடரில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் குறித்துப் பல சர்ச்சைகள் எழுந்தன.

சிஎஸ்கே
நேற்றைய ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளைச் சந்தித்த ருதுராஜ், ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். பவர்பிளே ஓவர்களில் மற்ற வீரர்கள் காட்டும் வேளையில், ருதுராஜ் ரன் குவிக்கத் திணறுவது சென்னை அணியின் தோல்விகளுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ருதுராஜின் இந்த மந்தமான ஆட்டம் குறித்துப் பயிற்சியாளர் பிளெமிங் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ருதுராஜ் பேட்டிங்
இது தொடர்பாக அவர், "பவர்பிளேயில் விக்கெட்டுகளை இழப்பது இந்த ஆண்டு எங்களைப் பெரிதும் பாதித்துள்ளது. ருதுராஜ் இதைவிடச் சிறப்பாக ஆடக்கூடியவர், கடந்த காலங்களில் அதைச் செய்தும் காட்டியுள்ளார். ஆனால், இந்த சீசனில் அவரால் ரன்களை குவிக்க முடியவில்லை. ஸ்டிரைக் ரேட்டும் திருப்திகரமாக இல்லை. இதை அவர் கண்டிப்பாகச் சரிசெய்தாக வேண்டும். மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.. இவர்களின் காம்பினேஷன் மற்றும் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் குறித்து நாங்கள் இன்னும் ஆழமாக யோசிக்க வேண்டியுள்ளது" என்றார்.
நேற்றைய பிட்ச் சற்றே மந்தமாக இருந்ததால் பந்து கிரிப் ஆகி வந்தது எனக் குறிப்பிட்ட பிளெமிங், "இந்த பிட்ச்சில் 180 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால், சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ஆடிய விதம் பாராட்டுக்குரியது. எங்களது ஸ்பின்னர்களை விட, அவர்களது வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய கட்டர்கள் தான் பெரிய சேதத்தை ஏற்படுத்தின" என்றார்.
கேப்டன்சி
தோனிக்கு பிறகு சிஎஸ்கேவை ருதுராஜ் வழிநடத்தி வருகிறார். இருப்பினும், ஒரு முறை கூட ருதுராஜ் கேப்டன்சியில் சிஎஸ்கே ப்ளே ஆப் சுற்றுக்கு கூட போகவில்லை. இதனால் அவரது கேப்டன்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. சஞ்சு சாம்சனுக்கு கேப்டன்சியை ஒப்படைக்க வேண்டும் என கூட பேச்சுகள் எழுந்துள்ளன. இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது, ருதுராஜிற்கு ஆதரவளிக்கும் வகையிலேயே பிளெமிங் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர், "கிரிக்கெட் உலகம் கண்ட மிக சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனியிடம் இருந்து, ஒரு புதிய கேப்டனுக்கு அணி மாறுவது என்பது மிக பெரிய விஷயம். அதற்கு டைம் எடுக்கும். ருதுராஜ் தற்போது ஒரு சிறந்த வேலையைத் தான் செய்து வருகிறார். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அவருக்குப் பெரிய மரியாதை கொடுக்கிறார்கள். அவர் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டு அதைச் செயல்படுத்தி வருகிறார். எதிர்காலத்தில் அவர் இந்த பிரான்சைஸிற்கு ஒரு சிறந்த கேப்டனாக வலம் வருவார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை" என்றார்.
அடுத்தடுத்து காயம்
ஐபிஎல் வரலாற்றில் இந்த சீசன் சிஎஸ்கேவுக்கு ஒரு ரோலஸ் கோஸ்டர் ஆண்டு என்றே சொல்ல வேண்டும். காயம் காரணமாக 'தல' தோனி இந்த சீசன் முழுவதும் விளையாடவில்லை.. தோனி மட்டுமின்றி நாதன் எல்லிஸ், கலீல் அகமது, ஆயுஷ் மத்ரே, ராமகிருஷ்ண கோஷ் என வரிசையாகப் பல வீரர்கள் காயம் காரணமாகத் தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications