இலங்கை ராணுவத்தின் திறன் கட்டமைப்பை இந்தியா மேம்படுத்தும்: கொழும்பு கருத்தரங்கில் உறுதி!
டெல்லி: இலங்கை ராணுவத்தின் திறன் கட்டமைப்பை இந்தியா மேம்படுத்தும் என்று கொழும்பு கருத்தரங்கில் இந்திய தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய - இலங்கை ராணுவக் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிக்கு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கண்காட்சியை இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பிரேமிதா பண்டாரா தென்னகூன் தொடங்கி வைத்தார். இருநாடுகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், பாதுகாப்புத்துறை தொடர்பான தங்களது உற்பத்திப் பொருட்களை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தன.

இந்நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக உரையாற்றிய பாதுகாப்புத்துறைச் செயலாளர் கிரிதர் அரமனே, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியா செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் திறன்களை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்தியாவின் கடல்சார் கொள்கை அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதக் குடியேற்றம் போன்றவை இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள பொதுவான சவால்கள் என்று கூறிய கிரிதர் அரமனே, இவற்றை எதிர்கொள்ள மேலும் அதிக ஒத்துழைப்பு அவசியம் என்றார்.















Click it and Unblock the Notifications