வேட்டை ஆரம்பம்.. பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறி வைத்து இறங்கிய இந்திய ராணுவம்! சரமாரி பதிலடி!
டெல்லி: பாகிஸ்தான் ராணுவம் இந்திய நகரங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து வந்த நிலையில் இன்று அதிகாலையில், பாகிஸ்தானுக்கு சரமாரி பதிலடியைக் கொடுத்துள்ளது இந்தியா. பாகிஸ்தான் நகரங்களை குறிவைத்து அட்டாக் மோடில் இறங்கியுள்ளது இந்திய ராணுவம்.
சனிக்கிழமை (மே 10) அதிகாலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பதிலடித் தாக்குதலைத் தொடங்கி உள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் உள்ள மூன்று விமானப்படை தளங்களையும் தாக்கியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா பதிலடி
பாகிஸ்தானின் நகரங்களில் பல குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. ராவல்பிண்டியில் 2 குண்டுகள், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் தலா ஒரு குண்டுகள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம், பஞ்சாபின் ஷோர்கோட்டில் உள்ள ரஃபிகி விமானப்படை தளம் மற்றும் பஞ்சாபின் சக்வாலில் உள்ள முரித் விமானப்படை தளம் ஆகிய மூன்று விமானப்படை தளங்களும் இந்த தாக்குதல்களில் குறி வைக்கப்பட்டுள்ளன.
நூர் கான் விமானப்படை தளம், ரஃபிகி விமானப்படை தளம் மீதான இந்தியாவின் தாக்குதலை இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (டிஜி ஐஎஸ்பிஆர்) டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷெரிப் சவுத்ரி உறுதிப்படுத்தி உள்ளார். அதேசமயம், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படை சொத்துக்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
வாலாட்டிய பாகிஸ்தான்
இந்தத் தாக்குதல்களில் இந்தியா வானிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்தியாவில் 26 இடங்களில் பாகிஸ்தான் புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான். இதனால், பல நகரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்தது. பாகிஸ்தானின் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இந்தியப் படைகள் இடைமறித்து அழித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் குடியிருப்பின் மீது நடந்த தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.
பதிலடி தாக்குதல் ஆரம்பம்
இந்திய ராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளைத் தாக்க பாகிஸ்தான் பலமுறை முயற்சித்ததைத் தொடர்ந்து, சில மணி நேரத்துக்குப் பிறகு இந்தியா பதிலடி தாக்குதல்களைத் தொடங்கி உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, வியாழக்கிழமை இரவு இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 36 இடங்களில் பாகிஸ்தான் ஏவிய சுமார் 300-400 ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
நிலைமையை நெருக்கமாக தொடர்ந்தும் கண்காணிக்த்து வருவதாகவும், பீதி அடைய தேவையில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ஆயுதப்படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இதுபோன்ற அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களும் கண்காணிக்கப்பட்டு எதிர்-ட்ரோன் அமைப்புகளைப் பயன்படுத்தி தகர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் சூழல்
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, புதன்கிழமை இந்திய ராணுவப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.
இதைத் தொடர்ந்து இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் தாக்குதலை நடத்திய நிலையில், அதனை முறியடித்து வந்தது இந்தியா. இந்நிலையில் இன்று அதிகாலையில் பாகிஸ்தான் நிலைகள் மீது இந்தியா அட்டாக்கை தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications