இந்தியாவில் கொரோனா பரிசோதனை குறைவாக உள்ளது: பயோகான் கிரண் மஜூம்தார் ஷா
டெல்லி: பிறநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா கூறியுள்ளார்.
Bloomberg India Economic Forum நிகழ்ச்சியில் பங்கேற்ற பயோகான் மருந்துகள் தயாரிப்பு நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார் ஷா கூறியதாவது:
இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் சிறப்பாக உள்ளது. ஆனால் பிற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டின் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது.
இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் அதாவது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டால் தற்போதைய நிலையில் அதை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் நாம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியா தற்போது கொரோனாவிடம் இருந்து தப்பி பாதுகாப்பான நிலையில் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது.
மேலும் ஒரு பீகார் அமைச்சர் மரணம்- இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான 20-வது மக்கள் பிரதிநிதி
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் சரியான சிகிச்சைகளால் கொரோனா மரணங்கள் கணிசமாக குறைந்தும் இருக்கின்றன. கொரோனா இறப்பு விகிதம் எப்போது ஜீரோவுக்கு வருகிறதோ அப்போதுதான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற நிலைமை உருவாகும்.
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லை. இது இன்னமும் மேம்படுத்தப்பட வேண்டும். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்துவது என்பது சவாலானதாக இருக்கும். இவ்வாறு கிரண் மஜூம்தார் ஷா கூறினார்.