காசா பணமா? இஷ்டத்துக்கு அடிச்சு விடும் சேனல்ஸ்..வதந்தி பரப்பும் நேரமா இது? பறந்த ஸ்ட்ரிக்ட் வார்னிங்
டெல்லி: காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத பயிற்சி மையம் உள்ளிட்டவை மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் இரண்டு நாட்களாக இந்தியா பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்திய போரில் பலத்த சேதத்தை சந்தித்ததாக பாகிஸ்தான் மீடியாக்கள் தொடர்ந்து பழைய வீடியோக்களை பகிர்ந்து வருகிறது. இந்தியாவிலும் இதுபோன்ற வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவை கோபம் அடைய வைத்த நிலையில், பல நாட்கள் காத்திருப்பதற்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை துல்லிய தாக்குதல் மூலம் இந்தியா தாக்கி அழித்தது.
ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை இந்திய ராணுவமும் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவில் இருந்து இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் சீன தயாரிப்பு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தொடங்கியது.

உடனடியாக இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் அதனை கண்டறிந்து ஏவுகணைகள் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழித்தன. இதனையடுத்து பாகிஸ்தானின் கராச்சி, இஸ்லாமாபாத் சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் நடைபெறும் என அழைக்கப்படும் கராச்சி துறைமுகத்தில் பல இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போர் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு போலி வீடியோக்கள் பரவி வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பயிற்சி விமானங்கள் விபத்தில் சிக்கிய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் இருக்கும் ராணுவ வீரர்கள், விமானப்படை வீராங்கனைகள், ஆகியவற்றின் புகைப்படங்களை எடுத்து பழைய விபத்து வீடியோக்களுடன் ஒப்பிட்டு பாகிஸ்தான் இந்தியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டது என பரப்பி வருகின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தான் சேனல்களில் இது போன்ற அதிகமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் பழைய தீ விபத்து வீடியோக்கள், விபத்து வீடியோக்கள், கலவர வீடியோக்கள் ஆகியவற்றை வைத்து இந்தியாவில் இது போன்று பிரச்சனை நடக்கிறது என பாகிஸ்தான் மீடியாக்கள் ஒளிபரப்பி வருகிறது. மேலும் பாகிஸ்தான் ஆதரவு நபர்கள் சிலர் இந்தியாவிலும் வாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இது போன்ற வீடியோக்களை பரப்பி வருகின்றனர்.
தொடர்ந்து இவை அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் இது போன்ற வீடியோக்களை பரப்ப வேண்டாம் எனவும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் வருகின்ற வீடியோக்களை அப்படியே ஃபார்வேர்டு செய்யக்கூடாது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில போலி செய்திகள் குறித்த விளக்கத்தையும் அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications