பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்.. மீன் வளத்துறையில் வேலை வாய்ப்பு.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கு இடையிலும் இந்தியா முன்னேற்ற பாதையை காட்டியுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார். லோக்சபா தேர்தல் வரை உள்ள நிலையில் மத்திய அரசின் பத்தாண்டு கால சாதனைகளைப் பட்டியலிட்டார்.

2014-ம் ஆண்டுக்கு முன் நாடு பல்வேறு சவால்களை சந்தித்தது. நாடு பெரும் சவால்களை சந்தித்த நேரத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி 2014-ல் பொறுப்பேற்றது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. சமூக அடிப்படையிலும் புவியியல் அடிப்படையிலும் மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
நாட்டு மக்கள் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர். இந்தியாவில் வளர்ச்சிக்கான முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளுக்கு வானமே எல்லை.கொரோனா பரவலுக்கு பின் உலக நாடுகளின் வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோதும் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.
சிறு, நடுத்தர குறுந்தொழில்கள் வளர்ச்சி அடைந்து உலக அளவில் போட்டியிடும் வகையில் மேம்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகள் என்பது வளர்ச்சிக்கான காலமாக இருக்கும். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். அறுவடைக்கு பின் விளைபொருட்களை பாதுகாக்க, மதிப்புக்கூட்டு பொருட்களை உருவாக்க சந்தைப்படுத்த திட்டம் வகுக்கப்படும்.
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.
மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 5 புதிய அக்குவா பார்க் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் லட்சாதிபதியாகும் பெண்கள் எண்ணிக்கையை 3 கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாலை நம்பியே இருக்கிறது என்று பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இந்தியா ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கு பால் உற்பத்தி செய்கிறது. கோதுமை மற்றும் அரிசி கூட இந்த அளவை எட்டவில்லை. பால்பண்ணைத் துறையின் மிகப்பெரிய பயனாளிகள் சிறு விவசாயிகள். கிராமங்களின் பரவலாக்கப்பட்ட பொருளாதார அமைப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இன்று பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கும் இந்தியா, 1950-1960ஆம் ஆண்டு களில் பால் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொண்டது. பிற நாடுகளில் இருந்து பாலை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில்
1965ஆம் ஆண்டு காலகட்டத்தில் தேசிய பால் மேம்பாடு வாரியத்தை நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அடுத்த 10 ஆண்டுகளில் பால் உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்நிறுவனம் செயல்பட தொடங்கியது. நாடு முழுவதும் பால் உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் வகையில் பால் கூட்டுறவு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. வெண்மை புரட்சியின் காரணமாகவே இந்தியா தற்போது பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications