பிரதமர் மோடிக்காக இந்தியா வாங்கும் புதிய பி777 விமானங்கள்.. இரண்டு அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள்
டெல்லி: பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணை தலைவர் ஆகியோர் மட்டுமே பயணிப்பதற்காக ஏவுகனை தடுப்பு பாதுகாப்பு வசதியுடன் பி777 என்ற இரண்டு விமானங்களை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது.
இந்த விமானங்களை இந்திய விமானப்படை விமானிகள் மட்டுமே இயக்குவார்கள் என விமானப்படை உயர் அதிகாரி தெரிவித்தார்,
தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் ஏர் இந்தியாவின் பி747 என்ற விமானங்களில் பயணிக்கிறார்கள். இந்த முக்கிய பிரமுகர்களின் விமானங்களை ஏர் இந்தியா விமானிகள் இயக்கி வருவதுடன் ஏர் இந்தியாவின் தொழில்நுட்ப பிரிவே (ஏஐஇஎஸ்எல்) பராமரித்து வருகிறது.
பிரதமர் பயணிக்க
இந்நிலையில் இந்தியா பி777 என்ற இரண்டு அதிநவீன அகலமான விமானங்களை அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து அடுத்த ஆண்டு ஜுலையில் வாங்குகிறது. அதில் 'ஏர் இந்தியா ஒன்' என்ற அழைப்பு அடையாளம் இருக்கும். பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர்களுக்காக ஐ.ஏ.எஃப் விமானிகள் மட்டுமே இரண்டு புதிய விமானங்களை இயக்குவார்கள் என்று தேசிய விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானிகளுக்கு பயிற்சி
ஐ.ஏ.எஃப் இன் 4-6 விமானிகளுக்கு ஏர் இந்தியா ஏற்கனவே பி777 விமானங்களை இயக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. "இந்திய விமானப்படையின் இன் வேறு சில விமானிகள் விரைவில் பயிற்சிக்கு வருவார்கள் என்றும் அந்த மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்த புதிய விமானங்கள் பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
டிரம்ப் பயணிக்கும் விமானம்
இந்த பி777 விமானங்களில் ஏவுணை தடுப்பு பாதுகாப்பு வசதி (LAIRCM), மற்றும் சுய பாதுகாப்பு அறைகள் (Self-Protection Suites) ஆகிய இரண்டு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. இவற்றை 1300 கோடி கொடுத்து இந்தியா வாங்குகிறது. இந்த வசதிகள் உள்ள விமானத்தில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணிக்கிறார்.
ஏவுகணைகளை தடுக்கும்
சிறிய ரக ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தலைவர்களை பாதுகாக்கும், மேலும் எச்சரிக்கை நேரத்தை அதிகரிக்கும். தவறான அலாரம் வீதங்களைக் குறைக்கும். விமானத்தை நோக்கி வரும்ஏவுகணைகளை தானாகவே எதிர்கொள்ளும்.