இந்தியாவில் 140 நாட்களுக்குப் பின் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - 1,300 பேருக்கு தொற்று உறுதி
டெல்லி: இந்தியாவில் 140 நாட்களுக்கு பின் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் மொத்தம் 1,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 3 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 334. முந்தைய நாளை விட கூடுதலாக 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று மட்டும் 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 140 நாட்களுக்குப் பின்னர் ஒருநாள் கொரோனா பாதிப்பு, 1300 ஆக பதிவாகி இருக்கிறது.
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பான மத்திய அரசின் அறிக்கை: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 7,530 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 7,605 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.02 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.79 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 718 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,60,997 பேர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,300 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.46% வாராந்திர பாதிப்பு விகிதம் 1.08%. இதுவரை மொத்தம் 92.06 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 89,078 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
முன்னதாக டெல்லியில் நேற்று கோவிட்19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்வதற்கான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், தடுப்பூசி முகாம்கள், கொவிட்-19 அவசரகால நடவடிக்கைகள் மற்றும் இன்ஃப்ளூயன்சாவை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களில் கொவிட்-19 தொற்று பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை செயலாளர், சர்வதேச அளவிலான கொவிட்-19 சூழ்நிலை குறித்தும், இந்தியாவில் தொற்று அதிகரிப்பு குறித்தும் உரையாற்றினார். இந்தியாவில் கொவிட்-19 தொற்று சற்று அதிகரிப்பது குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதாவது, 2023, மார்ச் 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக புதியதாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 888- ஆக இருந்ததாகவும், வாரந்திர தொற்று பாதிப்பு 0.98 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வாரத்தில் உலக நாடுகளில் நாள் தோறும் சராசரியாக 1.08 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி கடைசியாக நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் அளித்த அறிவுரைகளின்படி, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் முக்கியமான 20 கொவிட் தடுப்பு மருந்துகள், இதர 12 மருந்துகள், 8 தடுப்பு மருந்துகள், இன்ஃப்ளூயன்சா தடுப்பு மருந்துகள் ஆகியவற்றின் கையிருப்பு மற்றும் அவற்றின் விலை விவரம் குறித்து கண்காணிப்பது பற்றியும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி 22 ஆயிரம் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஒத்திகை குறித்தும் மருத்துவமனைகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விளக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் ஹெச்1என்1 மற்றும் ஹெச்3என்2 காய்ச்சல் தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா சூழ்நிலையை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். கொவிட் -19 தொற்றுநோய் இன்னும் முழுவதுமாக விலகவில்லை. எனவே நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் எடுத்துரைத்தார். பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கொவிட் வழிகாட்டு நெறிமுறை, ஆய்வக கண்காணிப்பு மற்றும் அனைத்து கடுமையான சுவாச நோய் (எஸ்ஏஆர்ஐ) ஆகிய 5-மடங்கு திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தினார். நமது மருத்துவமனைகள் அனைத்துத் தேவைகளுக்கும் தயாராக இருப்பதை உறுதிசெய்ய, மாதிரி ஒத்திகைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications