இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சம்.. ஒரே நாளில் 2.60 லட்சம் பேருக்கு கொரோனா
டெல்லி: இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொரோனாவால் 2,61,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,501 பேர் பலியாகிவிட்டனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் முதல் அலையை விட இரண்டாவது அலை சற்று வீரியமாகவே காணப்படுகிறது. முதல் அலையில் ஒரு நாள் பாதிப்பில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருந்தது.
ஆனால் இந்த இரண்டாவது அலையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் 1,47,88,109 பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,61,500 ஆகும்.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.41 கோடியாக உயர்வு!
கொரோனா தினசரி பாதிப்பு
தொடர்ந்து 4 ஆவது நாளாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 1,501 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 1,77,150 ஆகும்.
கொரோனாவிலிருந்து மீண்ட மக்கள்
கடந்த 24 மணி நேரத்தில் 1,38,423 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 1,28,09,643 ஆகும். 18,01,316 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது போல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவதால் பல மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகளும் வார இறுதி நேர லாக்டவுன்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
நோய்த் தொற்று
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 67,123 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37.7 லட்சமாகும். கொடுமையிலும் கொடுமையாக இந்த மாநிலத்தில் ஒரே நாளில் 419 பேர் பலியாகிவிட்டனர்.
இறப்போர் விகிதம்
மாநிலத்தில் குணமாகி வருவோரின் விகிதம் 81.18 சதவீதமாகவும், இறப்போரின் விகிதம் 1.59 சதவீதமாகவும் இருக்கிறது. இரண்டாவது முறையாக மகாராஷ்டிரத்தில் ஒருநாள் பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று 63,729 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டார்கள்.