இந்தியாவில் 17 மாநிலங்களில் 358 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு- மத்திய சுகாதாரத் துறை
டெல்லி: இந்தியாவில் 17 மாநிலங்களில் 358 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில்தான் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உலக நாடுகளை ஓமிக்ரான் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவிலும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

உலக நாடுகளில் 4-வது அலை
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக நாடுகளில் கொரோனா 4-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. டிசம்பர் 23-ந் தேதியன்று மட்டும் மொத்தம் 9 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்காவை ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 4 வாரங்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 7,000 என்ற அளவில் இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000க்கும் கீழே என்கிற நிலை தொடருகிறது. 2020 செப்டம்பர் மற்றும் 2021 மே மாதங்களில் மொத்தம் 2 கொரோனா அலைகளை இந்தியா எதிர்கொண்டிருக்கிஈறது. இந்தியாவில் கேரளாவிலும் மிசோரமிலும் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் மொத்தம் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம், 5% முதல் 10% இருக்கிறது.

108 நாடுகளில் 1 லட்சம் பாதிப்பு- இந்தியா
உலகம் முழுவதும் மொத்தம் 108 நாடுகளில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 358 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து 114 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
Recommended Video

ஓமிக்ரானும் தடுப்பூசியும்
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்புக்குள்ளான 183 பேரில் 121 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 44 பேர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளாதவர்கள். அதேநேரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் இவர்களில் 87 பேர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். 3 பேர் 3 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். 7 பேர் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள். இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications