நாடு முழுவதும்.. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,302 ஆக உயர்வு! 44 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 276 பேர் புதியதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,302 ஆகவும், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 1,373 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 510, குஜராத்தில் 461, மேற்கு வங்கத்தில் 432 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியில் 457 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்புகளை பொறுத்தவரை, டெல்லியில் 5 பேரும், கேரளாவில் 9 பேரும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மகாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத் மற்றும் டெல்லியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை அருணாச்சலப் பிரதேசம் மட்டும்தான் தொற்று பாதிப்பு ஒன்று கூட பதிவாகாத மாநிலமாக உள்ளது.
மாநில வாரியாக பாதிப்பு எண்ணிக்கை பார்த்தால், மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், 28 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 63 பேரும், டெல்லி மற்றும் குஜராத்தில் தலா 64 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் தற்போது 201 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவதால், கேரள அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவசர காலத்தில் சிகிச்சையளிப்பது குறித்து 'மாதிரி ஒத்திகைகளை' மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம், இரத்தக் கசிவு போன்ற அறிகுறிகளை கண்காணிக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிக காய்ச்சல், உணவு உட்கொள்வதில் சிரமம், வலிப்பு மற்றும் சுவாச பிரச்சனை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்று பாதிப்பு அதிகரிப்பதாக தெரிந்தாலும், இது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications