ஈசிஜி அவசியம்.. அவசரத்திற்கு ‘ரெம்டெசிவிர்’.. கொரோனா சிகிச்சை.. புதிய நெறிமுறை வெளியீடு
டெல்லி: கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான திருத்தப்பட்ட புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அவசர கால பயன்பாட்டுக்கு வைரஸ் தடுப்பு மருந்தான 'ரெம்டெசிவிர்' பரிந்துரைக்கலாம் என்று கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் தினமும் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கனோர் உயிரிழக்கிறார்கள். நோய் தொற்று பரவுவதை தடுக்கவோ அல்லது நோயை குணப்படுத்தவோ இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சோதனை அடிப்படையில் சில மருந்துகளை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். பிளாஸ்மா சிகிச்சை, ரெம்டெசிவிர் மருந்துகள், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஆகியவை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இவை இல்லாமல் சில தடுப்பு மருந்துகளும் தடுப்பூசிகளும் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எந்த அறிகுறியும் இல்லாமல் இறந்த 7 பேர்.. தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 38 பேர் மரணம்
மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சம், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான திருத்தப்பட்ட புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி கொரோனா தீவிரமாக பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அஜித்ரோமைசின் மாத்திரைகளுடன் சேர்த்து தரலாம் என்று முன்பு கூறியதை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.
கொடுக்க வேண்டாம்
மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப நிலையில் கொடுக்கலாம் என்றும் கொரோனா வைரஸ் தொற்று முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலன் கிடைக்கவில்லை
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா வைரசுக்கு எதிராக ‘இன்விட்ரோ' செயல்பாட்டை நிரூபித்துக்காட்டி உள்ளது. எனினும் கடுமையான வரம்புகளை கொண்ட பல பெரிய ஆய்வுகளில் பெரிய அளவுக்கு பலன் தரக்கூடிய முடிவுகள் கிடைக்கவில்லை. குறிப்பாக மரணத்தை தடுப்பதில், அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்துவதில் சாதகமான முடிவு கிடைக்கவில்லை. எனவே, அதன் பயன்பாட்டுக்கு பின்னால் உள்ள ஆதாரங்கள், மற்ற மருந்துகளைப் போல மட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன.
ஆரம்ப நிலையில் தரலாம்
எனவே சம்மந்தப்பட்ட நோயாளிகளிடம் கலந்து பேசி முடிவு எடுத்துதான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்க வேண்டும். பிற வைரஸ் தடுப்பு மருந்துகளைப் போலவே இந்த மருந்தைகயும் நோயின் போக்கில் ஆரம்ப நிலையிலேயே பயன்படுத்த வேண்டும். *ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பரிந்துரைப்பதற்கு முன்பாக நோயாளிக்கு இ.சி.ஜி. பரிசோதனை செய்து பார்த்துவிட வேண்டும்.
அவசர காலத்தில்
அவசர கால பயன்பாட்டுக்கு வைரஸ் தடுப்பு மருந்தான ‘ரெம்டெசிவிர்' பரிந்துரைக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்துக்கு இதுவரை அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை. அவசர காலத்தில் பயன்படுத்தவே அந்நாட்டில் அனுமதி அளித்திருக்கிறது. அதே பாணியில் மத்திய அரசும் ‘ரெம்டெசிவிர்' மருந்தை அவசர நிலையில் மட்டுமே பயன்படுத்த கூறியுள்ளது. கொரோனா தீவிரம் மிதமாக இருக்கிற நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.