சீனாவின் உளவு கப்பல் வருவதை உறுதி செய்த இலங்கை.. உன்னிப்பாக கவனிப்பதாக மத்திய அரசு கருத்து
டெல்லி: சீனாவின் உளவு கப்பல் வருவதை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள நிலையில் மத்திய அரசு நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் அரசியல், பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அரசியல் பதற்றங்களைத் தணிக்கவும் உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் சீனா மட்டும் இலங்கையின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது. இதன் ஒரு பகுதியாக இலங்கைக்கு உளவு கப்பலை ஆகஸ்ட் 11-ந் தேதி அனுப்புகிறது. இந்த கப்பல் ஒரு வார காலம் இலங்கை அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படும்.
இலங்கைக்குள் நுழையும் சீனாவின் உளவு கப்பலானது, 750 கி.மீக்கும் அதிக சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் சீனக் கப்பலுக்கு உண்டு. இலங்கையில் இருந்து இந்தியாவில் தமிழ்நாட்டின் கூடங்குளம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்களையும் எளிதில் உளவு பார்த்து, அது குறித்த தகவல்களையும் சேகரித்து விட முடியும் வல்லமை கொண்டது. இதனால் இந்திய தரப்பில் இது தொடர்பாக மேலோட்டமான எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் தொடக்கத்தில் இலங்கை இதனை நிராகரித்து வந்தது. தற்போது திடீரென சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாம் இந்த சீன கப்பல். இப்படித்தான் இலங்கை அரசு சொல்லி இருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, சீன உளவுக் கப்பல் வருவதை நாம் அறிவோம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.
சீனா உளவு கப்பலை அனுமதித்தால் இந்திய உதவிகள் கிடைக்காது...இலங்கை அரசுக்கு மலையகத் தலைவர்கள் வார்னிங்
Recommended Video
ஏற்கனவே சீனாவின் உளவு கப்பல் வருகையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா? இதனை இந்தியா உட்பட ஏனைய நாடுகள் எவ்வாறான கண்ணோட்டத்துடன் பார்க்கும். குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றது. இதனை அந்த நாடுகள் இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தலாக அமையுமா, அல்லது இந்திய பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக அமையுமா? என்பதை மிகவும் உன்னிப்பாக இந்த நாடுகள் கவனித்து வருகின்றது. இந்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.