புதிய உச்சம்- 24 மணிநேரத்தில் 55,079 பேருக்கு பாதிப்பு; கொரோனா மரணங்களில் உலகில் இந்தியா 5-வது இடம்
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 24 மணிநேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 24 மணிநேரத்தில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா மரணங்களில் உலகில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் அதேநேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்திருக்கிறது.

24 மணிநேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா
கடந்த 24 மணிநேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 24 மணிநேரத்தில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,38,871. ஆனால் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,57,806 ஆகும். கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 35,747.

உலக மரணங்களில் 5-வது இடம்
உலக நாடுகளில் கொரோனா மரணங்களில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 1,55,285பேரும் பிரேசிலில் 91,377 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 45,999 பேரும் மெக்சிகோவில் 45,361 பேரும் மரணித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக இந்தியா உள்ளது.

கொரோனா மொத்த பாதிப்பில் 3-வது இடம்
கொரோனா மொத்த பாதிப்பில் இந்தியா உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 4,634,985 பேரும் பிரேசிலில் 2,613,789 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 16,38,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஆக்டிவ் கேஸ்களில் தமிழகம் 4-வது இடம்
நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு முதல் 2 இடங்களில் உள்ளன. ஆனால் கொரோனா பாதித்து தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவை தொடர்ந்து தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications