இந்தியாவின் முதல் சிவப்பு சாலை.. வன விலங்குகளை காப்பாற்ற புதிய முயற்சி! எங்க இருக்குனு பாருங்க
டெல்லி: வன விலங்குகளை பாதுகாக்க தொடர் முயற்சிகளை நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மொத்த சாலையையும் சிவப்பு நிறத்தில் மாற்றியிருக்கிறது. இந்த சாலை எங்கே இருக்கிறது? என்பது குறித்து பார்ப்போம்.
இந்த சாலை இந்தியாவின் முதல் சிவப்பு நிற டேபிள் டாப் சாலையாக இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 45-ல் (NH-45) இந்தச் சாலை அமைந்துள்ளது. குறிப்பாக, இது சாகர் மற்றும் ஜபல்பூர் ஆகிய நகரங்களுக்கு இடையே, வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகத்தின் வழியாகச் செல்லும் 2 கிலோமீட்டர் நீளமுள்ள வனப்பகுதி மற்றும் மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளது

திட்டத்தின் பின்னணி
இந்த சாலை மொத்தம் 2 கி.மீ நீளம் கொண்டது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த சாலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வன விலங்குகள் சாலையை கடக்கும்போது விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கவும் சாலை சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. முகத்தில் அடிப்பதை போன்ற சிவப்பு நிறம், ஓட்டுநர்களை உஷாராக்கி வன விலங்குகள் மீது மோதுவதை தவிர்க்க சாலை இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சிறப்பம்சம் என்ன?
இது சாதாரண வேகத்தடை மாதிரி இருக்காது. இதன் தடிமன் வெறும் 5 மி.மீ தான். தெர்மோபிளாஸ்டிக்கால் ஆன இந்த சிவப்பு நிற பெயிண்ட், சாலையை விட உயர்ந்தது. உளவியல் ரீதியாக பார்த்தால், சிவப்பு நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது. எனவே இது ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை உணர்வை தூண்டி உஷாராக இருக்க செய்கிறது. எனவே இயல்பாகவே வேகம் குறையும்.
குறிப்பாக இரவு நேரத்தில் வாகனத்தின் ஹெட் லைட் இந்த சிவப்பு நிற பட்டை மீது படும்போது, பளிச்சென்று ஒளிரும். இதனால், ஓட்டுநர்கள் தூக்கத்தால் அல்லது கவனக்குறைவால் தடம் மாறுவது தவிர்க்கப்படும்.
தற்போது நவீன கார்களில் ADAS மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த சிவப்பு பட்டை இந்த சென்சாரை பாதிக்குமா? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்து விளக்கமளித்த நிபுணர்கள், ADAS அமைப்பு, கேமரா, ரேடார் மற்றும் லிடார் போன்ற சென்சார்களை பயன்படுத்துகின்றன. இந்த அமைப்பு வெறும் நிறத்தை மட்டும் பார்க்காமல் சாலையின் விளிம்புகள் மற்றும் ஒளியின் மாறுபாட்டை வைத்து செயல்படுகின்றன. எனவே பக்கவாட்டில் உள்ள வெள்ளை கோடுகள் அழியாதவரை இந்த அமைப்பால் பாதிப்பு ஏற்படாது என்று கூறுகின்றனர்.
வன விலங்குகள் பாதுகாப்பு
இந்த சிவப்பு பட்டைகள் மட்டும் வன விலங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்காது. எனவே, சாலையில் குறைந்த இடைவெளியில் சுமார் 25 சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இடைப்பட்ட சாலையின் ஓரத்தில் வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இது வன விலங்குகளை சுரங்க பாதைகளை நோக்கி நகர்த்தும். சுரங்க பாதைகள் அமைந்திருக்கும் பகுதிக்கு மேற்புறத்தில் வன விலங்குகள் சாலையை கடக்கும். இதன் மூலம் விபத்துகள் குறையும்.












Click it and Unblock the Notifications