சவுதி, ஈரான் திடீர் சமரசம்: இலங்கையை போல வளைகுடாவில் ஓங்கும் சீனாவின் கை? என்ன செய்யும் இந்தியா?
வளைகுடா நாடுகளில் சீனாவின் தலையீடு அதிகரிக்கும் நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
டெல்லி: வளைகுடா நாடுகளாக சவுதி அரேபியா, ஈரான் ஆகியவை திடீரென சீனாவின் தலையீட்டில் சமரசமாகிவிட்டன. இதனால் வளைகுடா நாடுகள் விவகாரத்தில் இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும் என்பது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சவுதி அரேபியா, அமெரிக்கா சார்புடன் இருந்தது. ஈரான் அமெரிக்காவை கடுமையாக எதிர்த்தது. சன்னி முஸ்லிமிகள் பெரும்பான்மையினராக உள்ள நாடு சவுதி அரேபியா. ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள நாடு ஈரான். 2016-ம் ஆண்டு சவுதியில் ஷியா மத தலைவர் தூக்கிலிடப்பட்டதால் சவுதி- ஈரான் இடையேயான பதற்றம் உச்சமடைந்தது.

இந்த இரு நாடுகளிடையேயான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தலையிட்டன. இதனால் இருநாட்டு உறவில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவோ சவுதி, ஈரான் இருநாடுகளுடனும் நட்புறவையே பேணி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சவுதி அரேபியா- அமெரிக்கா இடையேயான உறவு மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவும் ஈரானும் கை கோர்க்க தொடங்கின. உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம், அமெரிக்காவிடம் இருந்து சவுதி அரேபியாவை வெகுதொலைவு நகர்த்தியது. இந்த இடைவெளியில் சீனா தலையிடத் தொடங்கியது. இப்போது ஈரானும் சவுதி அரேபியாவும் நட்பு நாடுகளாக கை கோர்த்துக் கொண்டன. இதுவரை சர்வாதிகார முகத்துடன் வலம் வந்த சீனா இப்போது அமைதி முயற்சிகளை மேற்கொள்கிற நாடாக உருமாற்றம் அடைந்திருக்கிறது.
சவுதி- ஈரான் - சீனா -ரஷ்யா இந்த அணிசேர்க்கையானது இந்தியாவுக்கு எத்தகைய சாதகம்? பாதகம்? என்பதுதான் அரசியல் வட்டாரங்களின் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்தியாவை ஒட்டிய இலங்கையில் சீனாவின் கை ஓங்கி இருக்கிறது. நேபாளத்திலும் பூட்டானிலும் சீனா மூக்கை நுழைப்பதை மூர்க்கமாக வைத்திருக்கிறது. பாகிஸ்தான் எப்போதும் சீனாவின் எடுபிடி நாடாகத்தான் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும் இந்தியா-சீனா தலையீடு முக்கியமானதாக இருக்கிறது. இதனால் ஈரான், சவுதியில் சீனாவின் தலையீடு தற்போதைய இந்தியாவின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமா? என்கிற கேள்வி இருக்கிறது.
சீனாவைப் பொறுத்தவரையில் எந்த நாட்டின் மீதும் எந்த நேரத்திலும் எப்படியான ஒரு முடிவையும் எடுக்கக் கூடிய சர்வாதிகாரத்தனமானது. ஆனால் இந்தியா அப்படி எல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் எந்த நிலைப்பாடும் எடுத்துவிட முடியாது. இது இந்தியாவை சுற்றிய சீனாவின் வலைபின்னலில் சீனாவுக்கு சாதகமானதாகவே இருந்து வருகிறது. அதற்காக இந்திய வெளியுறவுக் கொள்கை நீர்த்துப் போகவில்லை; இந்திய வெளியுறவுக் கொள்கை நிலையானதாகவும் இறுக்கமானதாகவும் இருப்பதால் எப்போதும் போல ஒரே திடமான பயணம் தொடருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இருந்த போதும் இத்தகைய மென்மை அல்லது நிதானமான போக்கு, மெல்ல மெல்ல அண்டை நாடு தொடங்கி சர்வதேச அரசியல் வரையிலான இந்தியாவின் பிடியை தளர்த்தத்தான் செய்யும்; இது ஆரோக்கியமானது அல்ல என்கிற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications