வங்கதேசத்திற்கு விழும் அடி? பிரஷர் கொடுக்க இந்தியா முடிவு! முழு சப்போர்ட் கொடுக்கும் மம்தா
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் உடன்படிக்கையை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. அடுத்த கட்டமாக வங்கதேசம் உடனான கங்கை நதி நீர் பங்கீட்டு உடன்படிக்கை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி சில மாற்றங்களைக் கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் முழுக்க பாலைவனம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வங்கதேசம் பக்கம் திரும்பும் இந்தியா
பாகிஸ்தானைப் போலவே வங்கதேசம் உடனும் இந்தியாவுக்கு நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் இருக்கிறது. கங்கை நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாகவே இந்த ஒப்பந்தம் இருக்கிறது. இதற்கிடையே வங்கதேசம் உடனான கங்கை நதி நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சில மாற்றங்களைக் கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளது.
புதிய ஒப்பந்தம்
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தானது. அப்போது வங்கதேசம் உடன்படிக்கையை மாற்ற என்ன காரணம் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். வங்கதேசத்தைப் பொறுத்த வரை மோதல் எல்லாம் இல்லை. ஆனால், கங்கை நதி நீர் பங்கீட்டு உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டதிலிருந்து 30 வருடங்களில் அது காலாவதியாகும் வகையில் இருக்கிறது.
அதன்படி பார்த்தால் அடுத்தாண்டு அதாவது 2026இல் காலாவதியாக உள்ளது. பரஸ்பர உடன்பாடு தேவை என்றாலும், தற்போதைய வளர்ச்சி, அதிகரித்துள்ள தண்ணீர்த் தேவை ஆகியவற்றை பொறுத்து உடன்படிக்கையில் சில பல மாற்றங்கள் தேவை என்றே இந்தியா கருதுகிறது. இந்தக் கங்கை நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் என்றால் என்ன.. இது ஏன் இந்தியாவுக்கு முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கங்கை நதி நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கை என்றால் என்ன?
ஷேக் ஹசீனா முதன்முறையாக வங்கதேசப் பிரதமரான சமயத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே 1996 டிசம்பர் 12ம் தேதி இந்த உடன்படிக்கை கையெழுத்தானது. மேற்கு வங்கத்தில் வங்கதேச எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஃபரக்கா அணைக்கட்டில் கங்கை நதி நீரைப் பகிர்வது குறித்த ஒப்பந்தம் தான் இது.
கங்கை நதி நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கையின் முக்கிய குறிக்கோள் கங்கை நீரை நியாயமான மற்றும் சமமான முறையில் பங்கிடுவதை உறுதி செய்வதாகும். அப்போது கொல்கத்தா துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யக் கங்கை நதியிலிருந்து ஹூக்லி நதிக்குச் செல்லும் நீரை ஃபரக்கா அணை மூலம் திருப்பி விடப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாகவே கங்கை நதி நீர்ப் பங்கீட்டு உடன்படிக்கை போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி ஃபரக்காவில் தண்ணீரைப் பங்கிடக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 11 முதல் மே 11 வரை வறண்ட காலங்களில் 10 நாள் காலத்திற்கு இரு நாடுகளுக்கும் 35,000 கன அடி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன!
நீர்ப்பாசனம், துறைமுகப் பராமரிப்பு மற்றும் மின் உற்பத்தி போன்ற வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு இப்போது கூடுதலாக 30,000 முதல் 35,000 கன அடி நீர் தேவைப்படுகிறது. தற்போதைய விதிமுறைகளின்படி கிடைக்கும் நீர் போதுமானதாக இல்லை என்பதால் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கூடுதல் நீரைப் பெற விரும்புகிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை மேற்கு வங்க அரசும் ஆதரிக்கிறது.
1996 ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு மத்திய அரசு அப்போதிருந்த மாநில அரசுடன் போதிய ஆலோசனை நடத்தவில்லை என்று அங்கு அடுத்தடுத்து அமைந்த மாநில அரசுகள் குற்றஞ்சாட்டின. கங்கை மற்றும் டீஸ்டா நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தங்கள் இரண்டையும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications