இதுதான் இந்தியா..! ஒன்றல்ல.. இரண்டல்ல! பாகிஸ்தானின் பல ராணுவ தளங்கள் காலி! குறிவைத்து அடித்த ராணுவம்
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு இந்தியா தக்கப் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு ராணுவ கட்டமைப்புகள், விமானப்படைத் தளங்களைக் குறிவைத்து பதிலடி தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் 8 ராணுவத் தளங்கள் மீது இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் எல்லையில் நிலவும் சூழல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருவதாகவும் இந்தியா தேவையான பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய ராணுவம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவத் துறை அதிகாரிகள், "இந்தியாவில் 26 இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது.. பஞ்சாப்பில் அமைந்துள்ள ஏர் பேஸை குறிவைத்தும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது.. பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.. பாகிஸ்தானின் அனைத்துத் தாக்குதல்களையும் இந்தியா முறியடித்துள்ளது.
குறிவைத்துத் தாக்குதல்
அதிவேக ஏவுகணைகள் மூலம் பஞ்சாப் விமானப்படைத் தளத்தை நோக்கித் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. இன்று காலை 1.40 மணியளவில் அதிவேக ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், அந்தத் தாக்குதலையும் இந்திய ராணுவம் முறியடித்தது.. ஜம்முவில் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.. மருத்துவ மையங்கள், பள்ளிகளைக் குறிவைத்தும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தியாவின் எந்தவொரு ராணுவ சொத்துகளுக்கும் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை. நமது எஸ்400 பாதுகாப்பு அமைப்பு சேதமடைந்ததாகப் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது: ஆனால் எஸ்400 அமைப்புக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை...
பாகிஸ்தான் மீது பதிலடி
பாகிஸ்தான் திட்டமிட்டு நமது விமானப்படைத் தளங்களைக் குறிவைத்த தாக்குதல் நடத்தியதால்.. இந்தியப் பாதுகாப்புப் படைகள் விரைவான மற்றும் திட்டமிடப்பட்ட பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள தொழில்நுட்ப மையங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டன.
ரஃபிகி, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர் மற்றும் சுனியன் ஆகிய இடங்களில் உள்ள பாகிஸ்தான் ராணுவத் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல், போர் விமானங்கள் மூலம் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. பஸ்ரூரில் உள்ள ரேடார் தளம் மற்றும் சியால்கோட்டில் உள்ள விமானப்படைத் தளம் மீதும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேநேரம் இந்தப் பதிலடி நடவடிக்கையிலும், ராணுவ சொத்துகள் மட்டுமே குறிவைக்கப்பட்டன. அருகே உள்ள இடங்களில் குறைந்த சேதாரம் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டது" என்றார்.
அதிகரிக்கும் பதற்றம்
மேலும், எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னேறி வருவதாகவும் இந்திய ராணுவம் இப்போது ஹை அலர்ட் மோடில் இருப்பதாகவும் ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "காஷ்மீர், பஞ்சாப்பில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.. பொதுமக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலிலேயே உயிரிழப்பு ஏற்பட்டது" என்றார். மேலும், பாகிஸ்தான் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்ப முயன்று வருவதாகவும் இந்தியாவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வதந்தி பரப்ப முயல்வதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications