இந்தியாவின் புதிய ‛நேட்டோ'.. இணையும் இஸ்ரேல் + UAE.. துருக்கி - சவுதி - பாகிஸ்தானுக்கு ஸ்கெட்ச்!
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‛நேட்டோ' அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான வேலையை செய்து வருகிறார். அதேவேளையில் சவுதி அரேபியா - பாகிஸ்தான் போட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தில் துருக்கி இணைய தயாராகி வருகிறது. இது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில் தான் பதிலுக்கு இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் இணைந்து நம் நாடு ‛நேட்டோ' போன்ற அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் அது நம்முடைய எதிரியான பாகிஸ்தான், துருக்கிக்கு பெரிய அடியாக மாறும். இதுபற்றி விவரம் வருமாறு:
‛நேட்டோ'.. (NATO or North Atlantic Treaty Organization).. உலகில் 32 நாடுகளின் ராணுவ வீரர்கள் அங்கம் வகிக்கும் பெரிய அமைப்பாகும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்காக நேட்டோ தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்பட 32 நாடுகள் உள்ளன. இதில் 30 நாடுகள் ஐரோப்பா கண்டத்திலும், 2 நாடுகள் அமெரிக்கா கண்டத்திலும் உள்ளன.

நேட்டோ உறுப்பு நாடுகளின் ராணுவ வீரர்கள் இந்த அமைப்பில் ஒன்றிணைந்து செயல்பட்டு உள்ளன. ‛நேட்டோ' உள்ள உறுப்பு நாடுகள் மீது போர், தாக்குதல் நடத்தும்போது இந்த நேட்டோ படைகள் களமிறங்கி பதிலடி கொடுக்கும். தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேட்டோவில் இருந்து விலகுவதில் உறுதியாக உள்ளார்.
‛நேட்டோ' கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு அதிக வரி விதித்தது. நேட்டோவில் உள்ள டென்மார்க்கின் கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் துடிப்பது உள்ளிட்டவை ஐரோப்பிய நாடுகளை கோபப்படுத்தி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் ‛நேட்டோ'வில் இருந்து அமெரிக்கா வெளியேறலாம். பல நாடுகளின் ராணுவங்கள் ஒன்றிணைந்துள்ளதால் தான் சர்வதேச ‛நேட்டோ' தான் பலமான அமைப்பாக உள்ளது. ஆனால் அமெரிக்கா விலகும்போது அதன் பலம் பலமடங்கு சரியும்.
இப்படி ‛நேட்டோ' அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் தான் சைலன்ட்டாக பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடுகள் கைகோர்த்து ‛நேட்டோ' அமைப்பு போன்று செயல்பட திட்டமிட்டுள்ளன. நீண்டகாலமாகவே மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் பாதுகாப்புக்காக ‛நேட்டோ' போன்ற அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று பல முஸ்லிம் நாடுகள் முயல்கின்றன. ஆனால் இன்று வரை அது சாத்தியமாகவில்லை. இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கியின் இந்த செயல்பாடு இஸ்லாமிய ‛நேட்டோ' அமைப்புக்கு தொடக்கப்புள்ளியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது கடந்த ஆண்டு பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும், பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தத்தை (Strategic Mutual Defence Agreement) மேற்கொண்டது. அதன்படி பாகிஸ்தான் மீது யாராவது தாக்கினால் சவுதி அரேபியாவும், சவுதி அரேபியா மீது யாராவது தாக்கினால் பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கும். இந்த ஒப்பந்தத்தில் தான் துருக்கி இணைய ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை போய் கொண்டு இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் சாத்தியமாகும் பட்சத்தில் 3 நாடுகளும் ராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமி்னறி துருக்கி, சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் யாராவது தாக்குதல் மீதமுள்ள இருநாடுகளும் தங்கள் மீதான தாக்குதலாக கருதி பதிலடி கொடுப்பார்கள்.
மேலும் சவுதி அரேபியாவிடம் பணம் உள்ளது. பாகிஸ்தானிடம் அணுஆயுதம் உள்ளது. துருக்கி ராணுவ தொழில்நுட்பங்களை வைத்துள்ளது. இதனால் இந்த 3 நாடுகள் கைகோர்ப்பது அண்டை நாடுகளுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நமக்கும், பாகிஸ்தானுக்கும் பிரச்சனை உள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் மீதான ‛ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின்போது துருக்கி அந்த நாட்டுக்கு உதவியது.
இதனால் இந்த ஒப்பந்தம் தற்போது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அதேபோல் துருக்கி, சவுதி அரேபியா, பாகிஸ்தானுடன் இஸ்ரேலுக்கு பிரச்சனை இருக்கிறது. மத்திய கிழக்கில் இஸ்ரேலும், துருக்கியும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. அதேபோல் சவுதி அரேபியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கும் இப்போது பிரச்சனை உருவாகி உள்ளது. ஏமனில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவு படையினர் மீது சவுதி அரேபியா சில வாரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியதால் இருநாடுகளுக்கும் இடையே நட்பு விரிசலடைந்துள்ளது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கிக்கு போட்டியாக நம் நாடு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் இணைந்து ‛நேட்டோ' போன்ற அமைப்பை உருவாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது "இஸ்லாமிய நேட்டோ"வை எதிர்கொள்ள இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் - இஸ்ரேல் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 19ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நம் நாட்டுக்கு வந்தார். அப்போது இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே "Letter of Intent for a strategic defence partnership'' கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் பார்க்க லேசாக தெரிந்தாலும் அதன் பின்னணியில் பெரிய விஷயம் உள்ளது. இப்போது நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.இதனால் எதிர்காலத்தில் பெரிய போர் வரலாம். எனவே ஒவ்வொரு நாடுகளும் தங்களின் நாடுகளை பாதுகாக்க நட்பு நாடுகளுடன் ராணுவம் சார்ந்த கூட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே நல்ல நட்பு உள்ளது. அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்லாமிய நாடாக இருந்தாலும் கூட இஸ்ரேலுடன் உறவு வைத்துள்ளது. அமெரிக்காவின் ஆப்ரகாம் ஒப்பந்தங்களுக்கு பிறகு இருநாடுகள் இடையேயான உறவு பலமாகி வருகிறது. இதற்கு அமெரிக்கா பாலமாக செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி ஏமன் அருகே செங்கடல் பகுதியில் சவுதி அரேபியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் விரும்புகிறது. அதேபோல் செங்கடல் பகுதியில் ஏமனின் ஹவுதிகளால் இஸ்ரேல் வணிக கப்பலுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. இதனால் இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபுஎமிரேட்சும், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும் இஸ்ரேலும் தேவையானதாக உள்ளது.
அதேபோல், இஸ்ரேலிடமிருந்து நாம் பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்து வருகிறோம். இருநாடுகளும் சேர்ந்து ட்ரோன் உள்பட பிற தளவாடங்களில் சேர்ந்து செயல்பட தொடங்கி உள்ளது. கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, தொழில்நுட்ப பகிர்வுகளை செய்கிறது.
அதுமட்டுமின்றி கடந்த 2025 மே மாதம் பாகிஸ்தானுடன் நடந்த நான்கு நாள் போரின்போது இஸ்ரேல் நம் நாட்டுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தது. இந்தியா - இஸ்ரேல் உறவு பலமாக உள்ள. இந்நிலையில் தான் இந்தியாவை நம்பி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேலுடன் சேர்ந்து பாதுகாப்பு சார்ந்த ராணுவ ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
இது முதலில் ராணுவ ஒப்பந்தமாகவும், அதன்பிறகு கூட்டமைப்பாகவும் உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துடன் நம் நாடு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. அந்த நாட்டின் அதிபர் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஜனவரி 19ல் இந்தியா வந்தபோது இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த மாதம் பிரதமர் மோடி இஸ்ரேல் செல்ல உள்ளார்.அப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் தற்போது வரை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது அதிகாரப்பூர்வமாக முத்தரப்பு இராணுவ ஒப்பந்தம் எதுவும் இல்லை. அதேபோல் சவுதி அரேபியா -பாகிஸ்தான் ஒப்பந்தம் கையெழுத்தானாலும், துருக்கி இன்னும் முறையாக அதில் சேர்க்கப்படவில்லை.
துருக்கி இணையும் பட்சத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் விரைவில் ‛நேட்டோ' போன்ற ராணுவ உறவை இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் சேர்ந்து மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி சர்வதேச அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மைக்கேல் வத்திக்கியோடிஸ் கூறுகையில், " துருக்கி-சவுதி அரேபியா-பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்துள்ளது. இதில் இஸ்ரேலை இணைத்து புதிய புவிசார் அரசியல், பாதுகாப்பை எடுக்கிறது.இது அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகளின் நேட்டோ அமைப்பின் அடுத்த பரிணாமமாக இருக்கலாம்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications