அபிநந்தன் மீது தூசு பட்டாலும் தொலைந்தீர்கள்.. பாக்.கிற்கு இந்தியா கொடுத்த வார்னிங்
டெல்லி: உங்களுடன், பேச்சுவார்த்தை நடத்த முடியாது.. எங்கள் பைலட் அபிநந்தனுக்கு ஏதாவது நேர்ந்தால் தக்க பதிலடி தரப்படும்.. என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை செய்தியை இன்று, அனுப்பியிருந்தது.
பாகிஸ்தானின் போர் விமானத்தை விரட்டிச் சென்றபோது பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் இந்திய பைலட் அபிநந்தன் கைதியாக சிக்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின், காந்தகாரில் இந்திய விமானத்தை தீவிரவாதிகள் பிடித்து வைத்துக்கொண்டு, இந்திய சிறைகளில் இருந்த தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்கு பேரம் பேசியது போல, அபிநந்தனை, பயன்படுத்தி இந்தியாவின் படைகளை ஜம்மு காஷ்மீரில் இருந்து பின்வாங்க செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்து வந்தனர்.
ஆனால் இந்தியா ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தது. இம்முறை எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும், பேரத்திற்கும், தயார் இல்லை என்பதுதான் அது. இஸ்ரேல் பாணியில்தான், இதுபோன்ற பேரங்களை எதிர்கொள்ள இந்தியா தயாரானது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த பதட்ட நிலையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று இந்தியாவிற்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தி மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக இருந்தது. அதில், "இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. அதே நேரம் உங்கள் பிடியில் உள்ள எங்களது விமானிக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படக்கூடாது. எங்களது பைலட்டுக்கு ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். எங்கள் நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும். எனவே எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இன்றி அபிநந்தனை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஒரு செய்தி குறிப்பு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாக டெல்லியில் இருந்து வந்த செய்திகள் நமக்கு தெரிவித்தன.
இந்த செய்தி மீடியாக்களில் வெளியான அடுத்த 1 மணி நேரத்திற்குள், அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.