இந்தியர்களுக்கு முதலில் முன்னுரிமை.. அதிகரிக்கும் கொரோனா.. அரசு எடுத்த அதிரடி முடிவு.. அடுத்த என்ன?
டெல்லி: இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பூசி ஏற்றுமதி அடுத்த சில மாதங்களுக்கு அதிகப்படுத்தப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முதல் முறையாக இன்று இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மேலும், இந்தியாவில் புதிய மரபணு மாறிய கொரோனா பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தடுப்பூசி ஏற்றுமதி
கொரோனா தடுப்பூசி மட்டுமே வைரஸ் பாதிப்பைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம் இந்தியர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி வழங்கும் முன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து டெல்லி உயர் நீதி மன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன் கேள்வி எழுப்பியிருந்தது.
ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு
இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும் உள்நாட்டில் தடுப்பூசி தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதாலும் அடுத்த சில மாதங்களுக்குத் தடுப்பூசி ஏற்றுமதி அதிகப்படுத்தப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் தடுப்பூசி ஏற்றுமதி தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.
6.04 கோடி தடுப்பூசி ஏற்றுமதி
கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்குத் தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. சுமார் 80 நாடுகளுக்கு 6.04 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அண்டை நாடுகளுக்கு நட்பு ரீதியில், வணிக ஒப்பந்தம் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் என்று மூன்று வகையில் தடுப்பூசி ஏற்றுமதிக்கு தற்போது இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக்கு பின் முடிவு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் நிலைமை குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றும் தடுப்பூசி ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து அப்போது இருக்கும் நிலைமையை பொருத்து முடிவெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா இரண்டாம் அலை
இது குறித்து எஸ்பிஐ வல்லுநர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதாகவும் இது 100 நாட்கள் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏப்ரல் பிற்பகுதியில் உச்சமடையும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் சுமார் 25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.