இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் மாயம்.. அசாம் அருகே தேடும் பணி தீவிரம்!
டெல்லி: அசாம் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் - 30 ரக போர் விமானம் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாமில் இருந்து புறப்பட்ட போர் விமானம் திடீரென ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானத்தில் 2 வீரர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விமானம் காணாமல் போனது தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் சு-30 MKI ரக போர் விமானம், அசாம் ஜோர்ஹாட்டில் இருந்து இன்று இரவு 7.42 மணிக்கு புறப்பட்டது. இந்த நிலையில் திடீரென ரேடார் தொடர்பிலிருந்து போர் விமானம் துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.
இதனை இந்திய விமானப்படையும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. எக்ஸ் பதிவில், 'காணாமல் போன விமானத்தைத் தேடும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளது.
1980களில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட சுகோய் சு-30 MKI ரக போர் விமானங்கள் மிகவும் பிரத்யேக அம்சங்கள் கொண்டதாகும். இந்திய விமானப்படையின் மிக முக்கிய பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குகிறது.
நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் இதன் பல படைப்பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சுகோய் சு-30 விமானங்கள், முதன்முதலில் 1997-ல் இந்தியாவிடம் வழங்கப்பட்டன. தற்போது, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கிறது. இந்திய விமானப்படையிடம் 250-க்கும் மேற்பட்ட இந்த ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.












Click it and Unblock the Notifications