இமாச்சலில் கடும் பனி! சைதை துரைசாமி மகன் வெற்றியை தேட சென்னை அடையாறிலிருந்து சென்ற கடற்படை வீரர்கள்
டெல்லி: அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை சட்லஜ் ஆற்றில் இந்திய கடற்படையினர் தேடி வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சி மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. இவருடைய மகன் வெற்றி (45). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. தனது தந்தை நடத்தி வரும் மனிதநேய ஐஏஎஸ் பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார்.

மேலும் சினிமா படங்களையும் அவர் இயக்கி வருகிறார். இவர் த்ரில்லர் படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருந்தார். இதற்காக சிம்லா, லடாக் பகுதிகளில் லொகேஷன் பார்ப்பதற்காக தனது உதவியாளர் கோபிநாத்துடன் சென்றிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சட்லஜ் ஆற்றின் மேல் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக வாடகை காரில் வெற்றியும், கோபிநாத்தும் சென்றுக் கொண்டிருந்தனர். காரை டென்சின் இயக்கினார். இந்த நிலையில் கார் ஓட்டுநர் டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கார் தாறுமாறாக ஓடியது.
உடனே அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. தகவலறிந்த போலீஸார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் சென்றனர். அங்கு காரை மீட்ட போது அதில் டென்சின் உயிரிழந்திருந்தார். அது போல் அங்கிருந்த கற்கள் மீது விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றியை தேடும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் இரு நாட்கள் காத்திருக்குமாறு பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ 1 கோடி வழங்குவதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
மாயமான வெற்றியை கண்டுபிடிக்க இந்திய கடற்படையின் உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது. இதையடுத்து சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைந்துள்ளனர். விழுந்த இடத்திலிருந்து 15 கி.மீ சுற்றளவில் வெற்றியை தேடும் பணி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications