ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்
டெல்லி: அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் மேகங்கள் வளைகுடா பிராந்தியத்தைச் சூழ்ந்துள்ள நிலையில், அங்குச் சிக்கித் தவிக்கும் 18 இந்தியக் கப்பல்களை மீட்க இந்தியக் கடற்படை இப்போது ஒரு பிரம்மாண்ட மீட்பு ஆபரேஷனில இறங்கியுள்ளது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியத் துறைமுகங்களில் தேங்கிக்கிடக்கும் லட்சக்கணக்கான டன் சரக்குகளைச் சீரமைக்கவும் மத்திய அரசு இந்த ஆபரேஷனை ஆரம்பித்துள்ளது.
வளைகுடாவில் மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், ஹார்முஸ் பஞ்சாயத்து முடிந்தபாடில்லை. ஒரு பக்கம் ஈரான் அதில் கப்பல்களை விட மாட்டோம் எனச் சொல்லும் நிலையில், இன்னொரு பக்கம் அமெரிக்காவும் ஹார்முஸை முடக்குவோம் என மிரட்டியுள்ளது. இதனால் அங்கு பெரும் குழப்பமே நிலவுகிறது.

இந்தியக் கப்பல்கள்
இதற்கிடையே அங்கு சுமார் 18 இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ளன. யுத்தம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள அந்தக் கப்பல்கள் இந்தியாவின் எரிசக்தித் தேவைக்கு மிக முக்கியமானவை. 11 கச்சா எண்ணெய் டாங்கர்கள், 4 எல்பிஜி (LPG) கேரியர்கள் மற்றும் 3 எல்என்ஜி (LNG) கப்பல்கள் ஆகியவை அங்குச் சிக்கியுள்ளன.
இந்திய கடற்படை
இவற்றில் 5 கப்பல்கள் இந்திய நாட்டில் பதிவு செய்யப்பட்டவை.. மற்றவை இந்திய நிறுவனங்களால் குத்தகைக்கு எடுக்கப்பட்டவை. அங்குச் சிக்கித் தவிக்கும் 18 இந்தியக் கப்பல்களை மீட்க இந்தியக் கடற்படை இப்போது ஒரு பிரம்மாண்ட மீட்பு ஆபரேஷனில இறங்கியுள்ளது. இதில் எல்பிஜி கப்பலான கிரீன் ஆஷா (Green Asha) ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பையின் ஜேஎன்பிடி துறைமுகத்தை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. இது மற்ற கப்பல்களுக்கும் ஒரு நம்பிக்கையைத் தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியதால், இந்தியத் துறைமுகங்களில் இதுவரை இல்லாத அளவுக்குச் சரக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. சுமார் 1,06,890 TEU அளவிலான கன்டெய்னர்கள் துறைமுகங்களிலேயே முடங்கியுள்ளன. குறிப்பாக, அழுகக்கூடிய நிலையில் உள்ள உணவுப் பொருட்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதனால், நிலைமை சீராகும் வரை வளைகுடா நாடுகளுக்குப் புதிய சரக்கு ஏற்றுமதியைத் துறைமுகங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. மேலும், கப்பல் நிறுவனங்களுக்குத் துறைமுகக் கட்டணத்தில் சலுகை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாலுமிகள்
சரக்குக் கப்பல்கள் ஒருபுறம் என்றால், போர் தொடங்கிய போது பாரசீக வளைகுடா பகுதியில் சுமார் 20,000 இந்தியக் கப்பல் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதுதான் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 475 பேர் இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களில் பணிபுரிபவர்கள். இதுவரை மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து 1,754 மாலுமிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
சர்வதேச கடல்சார் அமைப்பு, தற்போது நிலவும் போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி ஒரு 'பாதுகாப்பான பாதையை' (Evacuation Corridors) உருவாக்கித் தருமாறு சம்பந்தப்பட்ட நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் முடங்கிக் கிடக்கும் சர்வதேச வர்த்தகம் மீண்டும் உயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications