Indian Navy: பாக்+சீனாவுக்கு ஒரே நேரத்தில் செக்.. ஜெர்மனி உதவியுடன் உருவாகும் கடல் ராட்சசன்! இந்தியா முக்கிய மூவ்
டெல்லி: ஜெர்மனி நாட்டின் ஒத்துழைப்புடன், இந்தியாவில் 6 நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. கடல் சார்ந்த விஷயங்களில் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு நீர்மூழ்கி கப்பல்களின் பலம் நிச்சயம் தேவை. எனவே இந்த முயற்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான 'மசகான் டாக் யார்ட்ஸ் லிமிடெட்', அடுத்த 10 ஆண்டுகளில் 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட திட்டமிட்டிருக்கிறது. இதற்காக ஜெர்மனி நாட்டின் 'திஸ்ஸென்க்ரப் மரைன் சிஸ்டம்ஸ்' எனும் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைக்குதான் தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சொந்தமாக நீர்மூழ்கி கப்பல்கள்
இந்த திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் நீர்மூழ்கி கப்பல்கள், டீசல்-எலக்ட்ரிக் வசதியுடன் இயங்கும். இதில் 'ஏர் இன்டிபெண்டென்ட் ப்ரொபல்ஷன்' அம்சம் பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது. பொதுவாக டீசல் மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள், பேட்ரியை ரீசார்ஜ் செய்ய கடலின் ஆழத்திலிருந்து மேற்பரப்புக்கு அடிக்கடி வர வேண்டும். இதனால் இதன் மறைந்திருந்து தாக்கும் திறன் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதை சரி செய்யத்தான் 'ஏர் இன்டிபெண்டென்ட் ப்ரொபல்ஷன்' அம்சம் இந்த கப்பல்களில் சேர்க்கப்பட்டது.
சிறப்பம்சங்கள்
இந்த அம்சம் கொண்ட கப்பல்கள் அடிக்கடி மேற்பரப்புக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அதிகபட்சமாக இரண்டு வாரங்கள் வரை இந்த கப்பலால் நீருக்கு அடியில் மறைந்திருக்க முடியும். உள்ளேயே தனது பேட்டரியை இது ரீசார்ஜ் செய்துக்கொள்ளும். மட்டுமல்லாது கப்பலுக்குள் இருக்கும் வீரர்களுக்கு தேவையான ஆக்சிஜனை இது உள்ளேயே உற்பத்தி செய்து கொடுக்கும். அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை விட இது அமைதியானது என்பதால், எளிதில் இதை கண்டுபிடிக்க முடியாது.
ஜெர்மனியின் நட்பு
ஜெர்மனியின் 'திஸ்ஸென்க்ரப் மரைன் சிஸ்டம்ஸ்' நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவுக்கு கப்பல்களை தயாரித்து கொடுத்திருக்கிறது. 1980களில் இந்தியா 4 HDW Class 209 ரக நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கியது. இந்த கப்பல்கள் கட்டுமானத்தில் 'திஸ்ஸென்க்ரப் மரைன் சிஸ்டம்ஸ்' நிறுவனம் முக்கிய பங்காற்றியது. தற்போது இந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில், அடுத்த 6 மாதத்திற்குள் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் இந்தியா அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை கட்டவும் திட்டமிட்டிருக்கிறது.
இந்தியாவுக்கு ஏன் நீர்மூழ்கி கப்பல்கள் அவசியம்?
கடற்பரப்பை பொறுத்தவரை, நாம் இன்னமும் பலமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அரபிக்கடலில் பாகிஸ்தானின் அச்சுறுத்தலும், இந்திய பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் அச்சுறுத்தல் இருக்கிறது. தற்போதைய சூழலில் நம்மால் பாகிஸ்தானை எளிதில் தோற்கடித்துவிட முடியும். இருப்பினும், சீனாவை எதிர்கொள்வது கொஞ்சம் கஷ்டமான காரியம். எனவே சீனாவுக்கு பதிலடி கொடுக்க நம்முடைய கடற்படை வலுப்படுத்த வேண்டியதாக இருக்கிறது.
இலங்கை, மாலத்தீவு என இந்தியாவின் கடல்சார் அண்டை நாடுகளுடன் சீனா நெருக்கமாக இருக்கிறது. இந்த நெருக்கம் நாளடைவில் ராணுவ நட்பாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எனவே, இதனை சமாளிக்க நாம் முழுமையாக தயாராக வேண்டும். அதற்கு இதுதான் சரியான நேரமும் கூட என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications