5 செமீ நகரும் இந்திய கண்டத் தட்டு-கடும் நிலநடுக்கம் சாத்தியம்- உத்தரகாண்ட் கதி? விஞ்ஞானிகள் வார்னிங்
இந்தியாவில் கடும் நிலநடுக்கம் ஏற்படக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி: இந்திய கண்டத் தட்டு அல்லது நிலத் தட்டு என்கிற டெக்டானிக் பிளேட் ஆண்டுக்கு 5 செ.மீ. அளவுக்கு நகர்ந்து கொண்டே இருப்பதால் பயங்கர நிலநடுக்கத்துக்கு சாத்தியங்கள் இருக்கின்றன என தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி என். பூர்ண சந்திர ராவ் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் உலக நாடுகளை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-த்த தாண்டியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. துருக்கி, சிரியாவில் இடைவிடாமல் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டும் வருகின்றன. இதனால் துருக்கி, சிரியாவின் துயரம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

துருக்கி, சிரியாவை தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களிலும் நில நடுக்கங்கள் பதிவாகி இருந்தன. இந்தியாவிலும் நிலநடுக்க சாத்தியங்கள் தொடர்பான ஆய்வுகளும் அறிவிக்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 2005-ம் ஆண்டு காஷ்மீரில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 80,000 பேர் உயிரிழந்தனர். முன்னதாக 2001-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 20,000 பேர் மரணம் அடைந்தனர். அண்மைக்காலமாக இமயமலை பகுதியான உத்தரகாண்ட் மிகப் பெரும் நிலநடுக்க பேரழிவை சந்திக்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி என். பூர்ண சந்திர ராவ் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிலநடுக்கங்கள் ஏற்படக் காரணமானவை கண்டத் தட்டுகள் நகருதல்தான். இந்திய கண்டத் தட்டு அல்லது டெக்டானிக் பிளேட் என்பது ஆண்டுக்கு 5 செ.மீ. நகர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கத்துக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தி இருக்கிறது என்கிறார்.

மேலும் இமயமலையில் நேபாளத்தின் வடக்கு மற்றும் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலம் இடையே பெரும் இடைவெளி உருவாகி கொண்டிருக்கிறது. இது உத்தரகாண்ட்டில் மிக மோசமான நிலநடுக்க பாதிப்பை எந்த நேரத்திலும் ஏற்படுத்தும் எனவும் விஞ்ஞானி என். பூர்ண சந்திர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது என டச்சு ஆய்வாளர் ஹூக்ர்பீட்ஸ் முன்னரே கணித்திருந்தார். அவரும் கூட அண்மையில் இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்க பாதிப்புக்கு சாத்தியம் இருக்கிறது என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications