அட்டாரி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட இந்திய தாய்.. குழந்தைகள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பு
டெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உரசல்கள் அதிகரித்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இதனையடுத்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற தனது குழந்தைகளை பிரிந்திருக்கிறார்.
இந்தியாவில் நீண்ட நாட்களாக வசித்து வரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பலரும் இந்த விசா ரத்து உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் சனா. இவர் கடந்த 2020ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. நீண்ட நாட்களாக இவர் தனது கணவர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். பிள்ளைகள் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள். இப்படி இருக்கையில் 45 நாட்கள் விசாவுடன் ஏப்.14ம் தேதி இந்தியாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். ஆனால் தீவிரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானியர்களுக்கான விசாவை இந்திய அரசு ரத்து செய்தது.
இதனால் பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற இவரது இரண்டு குழந்தைகள் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து இன்று சனா தனது குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்கு புறப்பட்டார். ஆனால், அட்டாரி எல்லையில் ராணுவத்தினர் இவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். சனாவிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்திருக்கிறது. அவர்கள் குழந்தைகளிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்திருக்கிறது. அந்நாட்டு விதியின்படி 9 ஆண்டுகள் பாகிஸ்தானில் வசித்தால்தான் குடியுரிமை கிடைக்கும்.
எனவே சனாவை பாகிஸ்தானுக்கு போக அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மாறாக குழந்தைகளை மட்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த இடம் பஹல்காம் பகுதியிலிருந்து 6 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த பகுதிக்கு போவதற்கு வாகன வசதிகள் கிடையாது. குதிரைகள் மூலமாகத்தான் போக முடியும். இதையெல்லாம் தெரிந்துக்கொண்ட தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.
தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானியர்களுக்கான விசாவை இந்தியா ரத்து செய்திருக்கிறது. எனவே இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications