எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை.. அமெரிக்க வர்த்தகத்துக்கு இன்னும் என்னலாம் பொறுத்துக்கனுமோ!
டெல்லி: சமீபத்தில் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்தித்திருந்த பிரதமர் மோடி, பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில் குறிப்பாக அமெரிக்க கச்சா எண்ணெய்யை வாங்குவது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அதை செய்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்காக இந்திய மக்களின் தலையில் இடியை இறக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்த தொடங்கியுள்ளன.

கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா சர்வதேச அளவில் 3வது பெரிய நாடாக இருக்கிறது. இங்கு ஒவ்வொரு நாளும் 50 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதாவது மொத்த தேவையில் 85% இறக்குமதி செய்யப்படுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக
ரஷ்யா - 40-45%
ஈராக் - 15-18%
சவுதி அரேபியா - 12 -18%
ஐக்கிய அரபு அமீரகம் - 5 - 8%
அமெரிக்கா - 5 - 7%
குவைத் - 3 - 5%
ஈரான் - 0%
என்கிற அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. உக்ரைன் போருக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து வெறும் 2% தான் எண்ணெய்யை வாங்கி வந்தோம். ஆனால் போர் காரணமாக எண்ணெய்யை குறைந்த விலையில் ரஷ்யா விற்க தொடங்கியது. மட்டுமல்லாது ரூபாயில் எண்ணெய் விற்பனையை செய்தது. மற்ற நாடுகளிடமிருந்து வாங்கினால் நாம் டாலரில் பணம் கொடுக்க வேண்டும். அதைவிட இது லாபம் வாய்ந்த பிசினஸ் என்பதால், இந்தியா ரஷ்யாவை கெட்டியாக பிடித்துக்கொண்டது.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவிடமிருந்து எண்ணெய்யை வாங்குவதற்கு இந்தியா தயாராகி வருவதால் விரைவில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். காரணம் அமெரிக்காவிலிருந்து எண்ணெய்யை இங்கு கொண்டு வர நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். உதாரணமாக சவுதி, UAE போன்ற மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் இந்தியா வந்து சேர வேண்டும் எனில் 2000-3000 கி.மீ தூரத்தை கடக்க வேண்டும். இதற்கு தோராயமாக 5-7 நாட்கள் தேவைப்படும்.
ரஷ்யாவிலிருந்து வர வேண்டும் எனில், 6,000-9,000 கி.மீ தொலைவை கடக்க வேண்டும். இதற்கு 15-25 நாட்கள் வரை ஆகும். ஆனால் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும் எனில், 15,000-18,000 கி.மி தொலைவை கடக்க வேண்டும். இதற்கு 35-45 நாட்கள் வரை ஆகும்.
மட்டுமல்லாது அமெரிக்கா, மார்க்கெட் விலையில்தான் எண்ணெய்யை விற்கிறது. ரஷ்யா ஒரு பேரலுக்கு 20-30 டாலர்கள் வரை தள்ளுபடி செய்து விற்கிறது. இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், அமெரிக்க கச்சா எண்ணெய் விலை அதிகம்தான். இதுபோக, மேலே குறிப்பிட்டபடி ரஷ்யாவிடம் இந்திய ரூபாயை கொடுத்தால் போதும். ஆனால் அமெரிக்காவுக்கு டாலர்களைதான் கொடுக்க வேண்டும்.
டாலர்களுக்கு நாம் எங்கு போவது? வெளி சந்தையில்தான் டாலரை வாங்க வேண்டும். இன்றைய தேதியில் ஒரு டாலரை வாங்க வேண்டும் எனில் ரூ. 86.59 கொடுக்க வேண்டும். எனவே அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் வாங்குவது நமக்கு நஷ்டம்தான். இந்த நஷ்டத்தை ஈடு செய்ய எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தும். இது நம்மை போன்ற சாதாரண மக்களுக்குதான் பிரச்சனை.
எனவே அமெரிக்க ஆயில் திட்டத்தை கைவிட வேண்டும் என பலரும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!












Click it and Unblock the Notifications