மோடி அடித்த அடி.. "இந்தியாவின் தண்ணீர்.. வேறு யாருக்கும் இல்லை”.. கதிகலங்கும் பாகிஸ்தான்!
டெல்லி: "இந்தியாவின் நதி நீர், நமது நாட்டின் நலன்களுக்கே பயன்படுத்தப்படும்" என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தான் நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி - வாகா எல்லை உடனடியாக மூடல், பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய விசா ரத்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை பாகிஸ்தான் மீது எடுத்தது இந்தியா.

இதில் முக்கியமான ஒன்று சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து நடவடிக்கை. செனாப் ஆற்றின் அனைத்து மதகுகளையும் இந்தியா மூடிய நிலையில், செனாப் ஆறு வறண்டு, பாகிஸ்தானுக்கு வரும் நீர்வரத்தும் மெல்ல குறைந்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது.
தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. நாளை (ஏப்ரல் 7) நாடு முழுக்க உள்ள 259 இடங்களில் போர் கால பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
சமீப நாட்களாக தண்ணீர் குறித்து ஊடகங்கள் அதிகம் பேசி வருகின்றன. முன்பு, இந்தியாவிற்கு சொந்தமான தண்ணீர், நாட்டிற்கு வெளியே பாய்ந்தது. ஆனால், இனிமேல், இந்தியாவின் நதி நீர், இந்தியாவின் நலன்களுக்கே பாயும். அது இந்தியாவின் நலன்களுக்கு பாதுகாக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.
பெரிய முடிவுகள் எடுப்பதற்கும், இலக்குகளை எட்டுவதற்கும் தேசிய நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், நமது நாட்டின் திறன் மீது நம்பிக்கை கொள்வதும் மிக முக்கியம். உள்நாட்டு உற்பத்தியை மையப்படுத்திய நகர்விலிருந்து இப்போது அரசு மக்களின் முன்னேற்றத்தை மையப்படுத்திய நகர்வை நோக்கி முன்னேற்றப் பாதையில் செல்கிறது." எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications