குறைந்த விலையில் விமான டிக்கெட் எடுப்பது ஓகே.. இதையும் படிங்க.. இல்லைனா கூடுதலாக செலவு செய்யணும்.!
டெல்லி: இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இண்டிகோ நிறுவனம் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் மிட்டில் கிளாஸ், குறையும் விமான கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

என்ன தான் தேடிக் கண்டுபிடித்து நாம் குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்தாலும், அதன் பிறகு உணவு சீட் செலக்ஷன் என்று நாம் கணிசமான தொகையைக் கட்ட வேண்டி இருக்கிறது.
முக்கிய அறிவிப்பு: இதற்கிடையே வெப் செக் இன் குறித்து இண்டிகோ நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகள் பலரும் இது குறித்து அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், அது அவர்களுக்குச் சற்றே நிம்மதி தருவதாக அமைந்துள்ளது. இதில் இண்டிகோ அளித்த விளக்கம் குறித்துப் பார்க்கும் முன்பு, வெப் செக் இன் என்றால் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக நாம் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்தாலும், விமானம் கிளம்பும் முன்பு செக் இன் செய்ய வேண்டும்.. அதன் பிறகே நம்மால் விமானத்தில் ஏற முடியும். இருக்கை ஒதுக்கீடு, லக்கேஜ் அளிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகள் இந்த செக் இன் பிராசஸில் தான் நடக்கும். இந்த செக் இன் பிராசஸில் விமான நிறுவனங்கள் பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றுதான் வெப் செக் இன்.
வெப் செக்-இன்: அதாவது நாம் செக் இன் பிராசஸை எப்போதும் ஏர்போர்ட்டில் செய்வோம். ஆனால், இந்த வெப் செக் இன் பிராசஸை இணையம் வாயிலாகவே செய்ய முடியும். பொதுவாக விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்னதாக வெப் செக் இன் செய்யத் தொடங்கலாம். கொரோனா காலத்தில் தான் உண்மையில் இந்த வெப் செக் இன் பிராசஸ் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அப்போது சமூக இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கையில் வெப் செக் இன் கட்டாயமாகக் கூட இருந்தது.
இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விளக்கிக் கொள்ளப்பட்ட போதிலும், இண்டிகோ நிறுவனம் வெப் செக் இன் கட்டாயம் எனச் சொல்வதே இந்த குழப்பத்திற்குக் காரணம். இதனால் விமான பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக அவர்கள் இணையத்தில் பதிவிட்டு வந்தனர். மேலும், இந்த செக் இன் பிராசஸில் தான் சீட் ஒதுக்கப்படும்.
கூடுதல் கட்டாயம்: வெப் செக் இன் கட்டாயமாக இருந்த நிலையில், எந்த சீட்டை தேர்வு செய்யவும் பணம் செலுத்த வேண்டும் என்ற சூழல் இருந்தது. இதுவே பயணிகள் புகாருக்குக் காரணமாகும். அதாவது நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய இந்த வெப் செக் இன் கட்டாயம். ஆனால், இந்த வெப் செக் இன் போது எந்தவொரு சீட்டையும் தேர்வு செய்யக் கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என்ற சூழலே இருந்தது.
இது தொடர்பாக மத்திய அரசுக்கும் புகார்கள் சென்ற நிலையில், நவ.8ஆம் தேதி மத்திய அரசு அனைத்து விமான நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது. இதற்கிடையே இண்டிகோ நிறுவனம் இந்த வெப் செக் இன் தொடர்பாக முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
பேக் அடித்த இண்டிகோ: வெப் செக் இன் "கட்டாயமில்லை" என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம் ஏர்போர்ட்டில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாகப் பயணிக்க இந்த வெப் செக்-இன் செய்யலாம் என்று இண்டிகோ நிறுவனம் பரிந்துரைக்கிறது.
அதாவது நீங்கள் வெப் செக் இன் கட்டாயம் என்று நினைத்து அதைச் செய்யத் தேவையில்லை. அப்படி செய்யும் போது நீங்கள் சீட் செலக்ஷன் உள்ளிட்டவற்றுக்குக் கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications