பட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா? பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்
Recommended Video
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1ம் தேதி, வரும் 2020-21ம் நிதியாண்டுக்கான, பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பட்ஜெட் என்பது வெறும் நிதி நிலை அறிக்கை கிடையாது. அதன் பின்னால் பெரிய வரலாறே உள்ளது. பல சுவாரசியங்கள் அடங்கியுள்ளது.
பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து அறிந்து கொள்ள காட்டும் ஆர்வத்தை, அது சார்ந்த சுவாரசிய விஷயங்களை அறிவதிலும் மக்கள் காட்டுவது வழக்கம். அதுபோன்ற, சில சுவாரசிய தகவல்கள் ஆச்சரியப்படுத்துவதாகவும் இருக்கும்.
இதோ பட்ஜெட் தொடர்பான, பத்து, சுவாரசிய தகவல்களை தொகுத்து தந்துள்ளோம். நீங்களே அதை பாருங்கள்:
விபூதி பூசியதையே தடுக்காதவர் பெரியார்.. ரஜினிகாந்த் கூறியது வரலாற்று பிழை: திருமாவளவன்
முதல் பட்ஜெட்
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டே, இடைக்கால பட்ஜெட்தான் என்பது ஆச்சரியமான தகவல்தான். 1947, நவம்பர் 26ம் தேதி முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி, இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது பொருளாதார ஆய்வு மட்டுமே, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் நாள் 100 நாட்களுக்குள் குறைவாக இருந்ததால், புதிய வரி மாற்றங்கள் எதுவும் முன்மொழியப்படவில்லை.
பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண்
1969 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது கட்சிக்குள் (காங்கிரஸ்) பல பிரச்சினைகளை சந்தித்தார்.
அந்த நேரத்தில் நாட்டின் துணை பிரதமரும், நிதியமைச்சருமாக இருந்த, மொரார்ஜி தேசாயுடன் கலந்தாலோசிக்காமல், இந்தியாவின் மிகப்பெரிய 14 வங்கிகளை தேசியமயமாக்குவது குறித்து இந்திரா காந்தி முடிவு செய்தாராம். எனவே மொரார்ஜி தேசாய், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் இந்திரா காந்தி நிதி அமைச்சகத்தையும் தன் வசம் எடுத்துக் கொண்டு மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்தார். இதன்மூலம், இந்தியாவில் நிதியமைச்சர் பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
சாதனை
மொரார்ஜி தேசாய் அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த சாதனைக்கு சொந்தக்காரர். மொரார்ஜி தேசாய், 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 9 முறை ப.சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 8 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இனிப்பு எடு கொண்டாடு
பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு, 10 நாட்களுக்கு முன்னர், அல்வா கிண்டும், விழா நடத்தப்படுகிறது. ஒரு முக்கியமான நிகழ்வை இனிமையாக தொடங்க இந்திய பாரம்பரியத்தில் இனிப்புடன் அதை துவங்குவார்கள். எனவே, பட்ஜெட் அச்சடிக்கும் பணிக்கு முன்பாக, அல்வா கிண்டி வழங்கப்படுகிறது.
நீக்கப்பட்ட நிதியமைச்சர்
இந்திரா காந்தி கொல்லப்பட்டதும், அவர் மகன், ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றார். அதே ஆண்டு, அதாவது, 1984 ஆம் ஆண்டில் இந்தியாவின் 10வது அமைச்சரவையின் நிதி அமைச்சராக வி.பி. சிங் நியமிக்கப்பட்டார். ஆனால் என்ன நடந்ததோ தெரியாது. 1987 ஆம் ஆண்டில் வி.பி.சிங் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். லோக்சபா எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். எனவே, ராஜிவ் காந்தி 1987-88 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
கனவு பட்ஜெட்
வருமான வரியைக் குறைத்தல் மற்றும் கார்ப்பரேட் வரி விகிதங்களை குறைத்தல் போன்ற பெரிய பொருளாதார சீர்திருத்தங்களால் 1997-98 பட்ஜெட், கனவு பட்ஜெட் என்றும் அழைக்கப்பட்டது. இதை ப.சிதம்பரம் தாக்கல் செய்தார்.
அரசியலமைப்பு நெருக்கடி
1998-99 பட்ஜெட் எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது, ஏனெனில் அப்போது அரசியலமைப்பு நெருக்கடி இருந்தது, அப்போதைய ஐ.கே. குஜ்ரால் அரசு, கலைக்கப்படவிருந்த காலகட்டம் அது. பட்ஜெட்டை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் சிறப்பு அமர்வு அழைக்கப்பட்டது. எனவே, இது வித்தியாசமான ஒரு பட்ஜெட் நிறைவேற்றமாக பார்க்கப்படுகிறது.
காலை பட்ஜெட்
பிப்ரவரி கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட்டை அறிவிக்கும் நடைமுறையை, நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 1999ல் மாற்றினார். அந்த வருடத்தில், காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ரயில் பட்ஜெட் இணைந்த பட்ஜெட்
2016ம் ஆண்டில், 92 வருடங்களில் முதல் முறையாக, பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட் இணைத்து தாக்கல் செய்யப்பட தொடங்கியது.
பிப்ரவரி 1 பட்ஜெட்
2017 ஆம் ஆண்டில், அப்போதைய நிதியமைச்சரான அருண் ஜெட்லி, அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில், அதாவது ஏப்ரல் 1 ஆம் தேதி வரவு செலவுத் திட்ட மாற்றங்களைச் செயல்படுத்த போதுமான கால அவகாசம் ஏற்படுத்த, பட்ஜெட் தாக்கல் தேதியை பிப்ரவரி 1க்கு மாற்றினார்.