உள் இடஒதுக்கீடு தீர்ப்பு செல்லும்.. திருமாவளவன் உள்பட அனைவரின் மனுவும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி: பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கியுள்ளோருக்கு மாநில அரசு உள் ஒதுக்கீடு அளிப்பதில், எந்தத் தவறும் இல்லை என உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக திருமாளவளவன் உள்ளிட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதேபோல, பஞ்சாப் மாநில அரசு கடந்த 2006-ம் ஆண்டில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி, மஜாபி சமூக மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது. இந்த இரண்டு உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல பல்வேறு மாநிலங்களில் உள்இடஒதுக்கீடு தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. அதாவது இந்த வழக்கு மீது விரிவான விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று கூறியிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், மனோஜ் மிஸ்ரா, விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சதீஷ் சந்திர மிஸ்ரா, பெலா எம்.திரிவேதி ஆகிய 7 பேர் அடங்கிய அமர்வு கையில் எடுத்தது.
இப்படியாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கடந்த 1ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில்,
“கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினருக்கான (எஸ்டி) இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. எனினும், உரிய ஆய்வுகளுக்கு பிறகே உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். துல்லியமான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மட்டுமே உள்ஒதுக்கீட்டை முடிவு செய்ய வேண்டும். அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம், பஞ்சாப் அரசின் உள்ஒதுக்கீடு சட்டம் செல்லும்” என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் மறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கு உள்துஒக்கீடு அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்பதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டத. இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம் நாத், பேலா எம் திரிவேதி, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் முடிவில், "தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. உச்ச நீதிமன்ற விதிகள் 2013ன் ஆணை XLVII விதி 1ன் கீழ் மறுஆய்வு செய்வதற்கான வழக்கு நிரூபிக்கப்படவில்லை. எனவே, மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று நீதிபதிகள் கூறினர். இதில் நீதிபதி பேலா எம் திரிவேதி மட்டும், பட்டியல் சாதிக்குள் பின்தங்கி உள்ளோர் என்பதை அரசு வகைப்படுத்தமுடியாது என்று மாறுப்பட் தீர்ப்பை வழங்கியுள்ளார். இருப்பினும் பெரும்பான்மை அடிப்படையில் மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications